மோடியின் 'மேக் இன் இந்தியா' திட்டத்திற்கு வலு சேர்க்கும் மெர்க்கலின் இந்திய பயணம்
பெங்களூர்: ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கலின் வருகை பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு வலு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக ஞாயிற்றுக்கிழமை டெல்லி வந்துள்ளார். அவர் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இரு நாடுகளுக்கு இடையேயான உறவு, பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர் அவர் பெங்களூர் கிளம்பி வருகிறார்.
மோடி நாளை பெங்களூர் வருகிறார். பெங்களூரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நாஸ்காம் நடத்தும் கூட்டத்தில் மோடியும், மெர்க்கலும் கலந்து கொள்கிறார்கள். அந்த கூட்டத்தில் ஜெர்மனி மற்றும் இந்திய அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள். திறன் மேம்பாடு, பயிற்சி, மேக் இன் இந்தியா திட்டம் குறித்து மோடியும், மெர்க்கலும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்கள் இருவரும் மதிய விருந்தின்போது இந்தியா, ஜெர்மனியைச் சேர்ந்த தொழில் அதிபர்களை சந்தித்து பேசுகிறார்கள். இந்தியா-ஜெர்மனி இடையேயான வர்த்தக உறவு நாளுக்கு நாள் மேம்பட்டு வருகிறது. கடந்த 7 மாதங்களில் மட்டும் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் 13 சதவீதம் அதிகரித்துள்ளது.
சுமார் 1, 265 ஜெர்மனி நிறுவனங்கள் இந்தியாவில் கடைகளைத் திறந்துள்ளன. அதில் 35 நிறுவனங்கள் இந்தியாவில் தங்களின் ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையங்களை அமைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.