விமான கண்காட்சி: பெங்களூரில் குவியும் வெளிநாட்டு விமானங்கள்
பெங்களூர்: பெங்களூர் விமான கண்காட்சியில் கலந்து கொள்ள பல நாட்டு விமானங்கள் ஏலஹன்கா வரத் துவங்கிவிட்டன.
பாதுகாப்புத் துறை நடத்தும் 10வது விமான கண்காட்சி வரும் 18ம் தேதி பெங்களூரில் உள்ள ஏல்ஹன்கா விமானப்படை தளத்தில் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் கலந்து கொள்ள பன்னாட்டு விமானங்கள் ஏலஹன்கா வரத் துவங்கியுள்ளன.
கண்காட்சியில் கலந்து கொள்ள உள்ள சில போர் விமானங்கள் ஏற்கனவே பயிற்சியைத் துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து கண்காட்சி வேலைகளை கவனித்து வரும் அதிகாரி ஒருவர் ஒன்இந்தியாவிடம் கூறுகையில்,
பல நாடுகளில் இருந்து விமானங்கள் வரத் துவங்கியுள்ளதால் விமானங்கள் நிறுத்துமிடம் நிரம்பி வருகிறது. ஹெச்.ஏ.எல். விமானங்களும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன என்றார்.
பிரான்ஸ் விமானப்படையின் ஏர்பஸ் ஏ400எம் ஏலஹன்கா வந்துவிட்டதாம். மேலும் 3 விமானங்கள் பிரான்ஸில் இருந்து வர உள்ளன. எப்-16 ரக விமானங்களும் வந்துள்ளன. இந்திய விமானப்படையின் சி-17, எம்ஐ-17 விமானங்களும் ஏலஹன்கா வந்துள்ளன.
மோடி:
விமான கண்காட்சியை துவக்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி வரும் 18ம் தேதி காலை 9 மணிக்கு ஏலஹன்கா வருகிறார். துவக்க விழா இரண்டரை மணிநேரம் நடக்கும் என்று கூறப்படுகிறது. இதையொட்டி ஏலஹன்காவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கண்காட்சி துவங்க 48 மணிநேரத்திற்கு முன்பு ஏலஹன்கா விமானப்படை தளம் சிறப்பு பாதுகாப்பு பிரிவின் கண்காணிப்பில் வந்துவிடும்.
இம்முறை விமான கண்காட்சியில் சுமார் 70 விமானங்கள் கலந்து கொள்கின்றன. இந்த கண்காட்சியில் இந்தியாவின் பெருமையான இலகுரக விமானமான தேஜாஸ் அனைவரின் கவனத்தையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விமான கண்காட்சியில் இந்திய அணிகள் த்ருவ், ருத்ரா, சுகோய், டைகர் மோத் ஆகிய விமானங்களை ஓட்ட உள்ளன. கண்காட்சியில் எப்-15சி ஈகிள், லாக்ஹீட் எப்-16சி, போயிங் கேசி-17, ரபால் மற்றும் எம்ப்ரார் இஎம்பி-145ஐ ஆகிய வெளிநாட்டு விமானங்கள் பங்கேற்கின்றன.
இது தவிர பிசி-12என்ஜி, பால்கன் 2000, பெனாம் 100இ, போயிங் பி-75, போயிங் ஏ- 75, வைக்கிங், கேட்வாக், ஆர்ஆர்ஜே 95, பெல் 407 ஜிஎக்ஸ் ஹெலிகாப்டர், கிங் ஏர் 350 இஆர் உள்ளிட்ட ஏராளமான விமானங்களும் கண்காட்சியில் கலந்து கொள்கின்றன.