மெட்ரோ ரயிலால் காற்று மாசு குறைந்தது.. பெங்களூர்வாசிகள் இனி நிம்மதி 'பெருமூச்சு' விடலாம்
பெங்களூர்: மெட்ரோ ரயில் மார்க்கத்தை நீடித்த பிறகு, பெங்களூரின் மைய பகுதிகளில் காற்று மாசு குறைந்துள்ளது என்பது கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பெங்களூரின் கிழக்கு பகுதியான பையப்பனஹள்ளி முதல் மேற்கு பகுதியிலுள்ள நாயன்டஹள்ளி வரையிலான 18.1 கிமீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதை சமீபத்தில் திறக்கப்பட்டது. முன்பு பையப்பனஹள்ளி முதல் எம்.ஜி.ரோடு வரையிலான 6 கி.மீ தொலைவிற்கு மட்டுமே ரயில் பாதையில் ரயில் போக்குவரத்து இருந்தது. அப்போதைய விட இப்போது, மாசு குறைந்துள்ளது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, பஸ் நிலையம், ரயில்வே நிலையம் போன்ற மக்கள் கூடும் முக்கிய இடம் அமைந்துள்ள மெஜஸ்டிக் பகுதியில், 46 சதவீதம் அளவுக்கு மாசு குறைந்துள்ளதாம். இது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்கிறார்கள் சுற்றுச்சூழலியலாளர்கள்.
மெட்ரோ ரயில் இயக்கப்படும் பாதையில் சுமார் 3 ஆயிரம் பைக்குகளின் போக்குவரத்து குறைந்துள்ளதாக போக்குவரத்து போலீசாரின் கணக்கெடுப்பு கூறுகிறது.