400 பேருடன் 'மேவாட்' ஆன்லைன் மோசடி கும்பல்- ஆளுக்கு ரூ3,000 சம்பளம்- எவ்வளவுடா கொள்ளை அடிப்பீங்க?
மேவாட்: சென்னையில் ஏ.டி.எம்.-ல் நூதன கொள்ளை, போலி ஃபேஸ்புக் பக்கங்களை உருவாக்கி பணம் மோசடி, ஓஎல்எக்ஸ் தளங்களில் விற்பனை மோசடி.. நாடு முழுவதும் நடக்கும் இந்த ஆன்லைன் மோசடிகளுக்கு பின்னணியில் இருப்பது ஹரியானாவின் மேவாட் மாவட்ட குற்றவாளிகள்தான். ஆன்லைன் மோசடி புகார்களை கையில் வைத்து கொண்டு ஒவ்வொரு மாநில போலீசாரும் மேவாட் நோக்கி படையெடுத்து கொண்டிருக்கின்றனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜமத்ரா... இந்த கிராமம்தான் ஆன்லைன் மோசடிகளின் தாயகமாக இருந்தது. இப்போது ஜமத்ரா கொள்ளையர்களைவிட ஆபத்தானவர்களாக உருவெடுத்துள்ளனர் ஹரியானாவின் மேவாட் ஆன்லைன் கொள்ளையர்கள்.
கல்வி கட்டணம் எவ்வளவு.. 'டிசி', ஆன்லைன் கிளாஸ், தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு '6' அறிவுறுத்தல்
ஹரியானா, உ.பி., ராஜஸ்தான் ஆகிய 3 மாநில எல்லைகளில் மேவாட் உள்ளது. இந்த மாவட்டத்தின் 150 கிராமங்களைச் சேர்ந்தவர்கள்தான் ஆன்லைன் மோசடிகளில் ஈடுபடுகிறவர்கள். அதுவும் நூதனமான முறையில் புதிய புதிய வகைகளில் நாட்டையே அதிரவைத்துக் கொண்டிருக்கிறது இந்த மேவாட் கும்பல்.
போலி ஆவணங்கள் மூலம் சிம்
முதலில் இந்த கும்பல் சேகரிப்பது போலி ஆவணங்களைத்தான். லோன் வாங்கி தருவதாக கூறி ஏஜென்சிகள் பெறுகிற பெரும்பாலான ஆவணங்கள் இந்த கும்பல் கைகளுக்குப் போகிறது. இதனை பயன்படுத்தி போலியான பெயர்களில் சிம்கார்டுகளை வாங்குகின்றனர்.
போலி பேஸ்புக் பக்கம் மூலம் மோசடி
இந்த ஆன்லைன் மோசடியில் ஈடுபடும் கும்பலுக்கு இடையே மட்டுமே இந்த போன் நம்பர் ஷேர் செய்யப்படும். ஃபேஸ்புக்கில் 3,000க்கும் அதிகமான நட்புவட்டம் உள்ளவர்களை முதலில் டார்கெட் செய்கிறது இந்த கும்பல். அவர்களது பெயரில் போலி பேஸ்புக் அக்கவுண்ட் ஓபன் செய்து ரூ5,000, ரூ10,000 கொடுங்க என நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்புவது இந்த கும்பல்தானாம். உத்தரகாண்ட் மாநிலத்தில் இப்படி பதிவான 400 புகார்களுடன் மேவாட் மாவட்டத்தில் முகாமிட்டுள்ளனர் அம்மாநில போலீசார்.
ஆன்லைனில் விற்பனை மோசடி
இதையடுத்து ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்வதாக மற்றும் வாங்குவதாக கூறி விளம்பரம் செய்து பணம் பறிப்பதும் இந்த கும்பல்தானாம். ஓஎல்எக்ஸ் தளத்தை அக்குவேறாக ஆணிவேறாக அலசி இந்த மோசடியை அரங்கேற்றுகிறது இந்த கும்பல். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மகளிடம் கார் மோசடியில் ஈடுபட்டதும் இந்த மேவாட் கும்பல்தானாம்.
நூதன ஏ.டி.எம். மோசடி
அதேபோல் ஏ.டி.எம். பணம் கொள்ளையடிப்பது; சென்னையில் மிக நூதனமாக ஏ.எடி.எம். கொள்ளையில் ஈடுபட்டது போல வட இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த கும்பல் கை வரிசை காட்டி சிக்கி இருக்கிறது. இப்படி ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு சிக்கும் நபர்கள் பெரும்பாலும் ஹரியானாவின் மேவாட் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் போலீசார் மேவாட் கேங் என பட்டம் சூட்டி இருக்கின்றனர்.
400 பேர், ரூ3,000 கூலி
நாடு முழுவதும் நாள்தோறும் மேவாட்டை சேர்ந்த 300 முதல் 400 பேர் ஆன்லைன் மோசடிகளில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கான ஒருநாள் வருமானம் ரூ3,000.. அப்படியானால் இவர்கள் ஒருநாளைக்கு எத்தனை கோடி கொள்ளையடிப்பார்கள் என பார்த்து கொள்ளுங்கள் என்கிறார் ஒரு போலீஸ் உயர் அதிகாரி.
திருச்சி ராம்ஜிநகர் கொள்ளையர்கள்
ஒருகாலத்தில் வட இந்தியாவில் நடக்கும் கொள்ளைகளுக்கு திருச்சி ராம்ஜிநகர் கொள்ளையர்கள்தான் காரணமாக இருந்தனர். ராம்ஜிநகரில் இருந்து கூட்டமாக கிளம்பிச் செல்வார்கள். ஆங்காங்கே முகாமிட்டு கொள்ளையடித்துவிட்டு ராம்ஜிநகர் திரும்பி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். இதனால் ராம்ஜிநகர் கொள்ளையர்களை தேடி பிற மாநில போலீசார் திருச்சியில் முகாமிட்டு கொண்டிருந்ததும் உண்டு.
பவேரியா பழங்குடிகள்
தீரன் அதிகாரம் படத்தில் பவேரியா எனும் பழங்குடியினர் கொள்ளையர்களாக காட்டப்பட்டு இருப்பர்; பவேரியா கேங் என்ற பெயரில் அவர்கள் அழைக்கப்பட்டனர். இந்த வரிசையில் ஜார்க்கண்ட் ஜமத்ராவை தொடர்ந்து ஹரியானாவின் மேவாட் கேங்கும் போலீஸ் ஹிஸ்டரியில் இடம்பிடித்திருக்கிறது.