வீரப்பன் கூட்டாளிகள் உட்பட 18 பேரின் 'தூக்கு ரத்து' தீர்ப்புகளை எதிர்த்து மத்திய அரசு முறையீடு!
டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சதாசிவம் பதவி வகித்த காலத்தில் 18 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைகளை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றி அளித்த தீர்ப்புகளை எதிர்த்து அரசியல் சாசன பெஞ்ச் முன்பு முறையீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்து ஆயுள் தண்டனையாக்கியது. மூவரது கருணை மனுவை ஜனாதிபதி 11 ஆண்டுகாலம் கழித்து நிராகரித்ததால் இவர்களது தூக்கு ஆயுள் தண்டனையாக்கப்பட்டது என்பது தீர்ப்பு.
இதைத் தொடர்ந்து ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் இம்மூவர் மற்றும் நளினி உட்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இம்முறையீட்டு மனுவை அரசியல் சாசன பெஞ்ச்சுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
தலைமை நீதிபதி சதாசிவம் பதவி காலத்தில் சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் 4 பேர், டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் தூக்கு விதிக்கப்பட்ட புல்லர் உள்ளிட்ட பலரது தூக்கு தண்டனையானது கருணை மனுக்களை ஜனாதிபதி தாமதமாக நிராகரித்தார் என்ற காரணத்தைக் காட்டியே ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
தற்போது இந்த தூக்கு தண்டனைகளை ரத்து செய்து அளித்த தீர்ப்புகளை எதிர்த்து அரசியல் சாசன பெஞ்ச் முன்பு மேல்முறையீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது அரசியல் சாசனப்படி கருணை மனுக்களை ஜனாதிபதி நிராகரிக்க காலக்கெடு எதுவும் விதிக்க முடியாது என்பது மத்திய அரசின் வாதம். இதை அரசியல் சாசன பெஞ்ச் முன்பு எடுத்து வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.