சன் குழும 33 சேனல்கள் ஒளிபரப்புக்கு அனுமதி தர உள்துறை மறுப்பு...சன் டி.வி. லைசன்ஸ் கேன்சல்?
டெல்லி: தென்னிந்தியாவின் மிகப் பெரிய தொலைக்காட்சி குழுமமான சன் டி.வி.யின் 33 சேனல்களை ஒளிபரப்புவதற்காக 'பாதுகாப்பு அனுமதியை" அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் இந்த ஒட்டுமொத்தமாக சன் டி.வி உட்பட அதன் 33 சேனல்களின் ஒளிபரப்பு லைசன்ஸ்கள் ரத்தாகும் நிலைமை உருவாகி உள்ளது.
சன் டி.வி. குழுமத்தில் தமிழ், தெலுங்கும், மலையாளம், கன்னட மொழிகளில் 33 சேனல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இக்குழுமத்தின் தலைவரான கலாநிதி மாறன், அவரது சகோதரரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் ஆகியோர் மீது ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கு, சட்டவிரோத தொலைபேசி இணைப்பக வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த வழக்குகளால் சன் டி.வி. குழுமத்துக்கு சொந்தமான சன் டி.வி. இடம் உட்பட ரூ742 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கப் பிரிவு முடக்கி வைத்துள்ளது. இந்த சொத்துகள் முடக்கத்தை எதிர்த்து கலாநிதி, தயாநிதி மாறன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சன் டி.வி. குழுமத்துக்கு சொந்தமான 40 எஃப்.எம். ரேடியோக்களின் ஒலிபரப்புக்கான 'பாதுகாப்பு அனுமதியை' உள்துறை அமைச்சகம் அண்மையில் வழங்க மறுத்தது. மத்திய ஒளிபரப்புத் துறை அமைச்சரான அருண்ஜேட்லி தலையிட்டும் கூட உள்துறை அமைச்சகம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. இதனால் சன். டி.வியி. எஃப்.எம்.கள் ஒலிபரப்பாவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதேபோல் சன் டி.வி. குழுமத்துக்குச் சொந்தமான சன் டி.வி. உட்பட 33 சேனல்களின் ஒளிபரப்பு உரிமத்தைப் (லைசன்ஸை) புதுப்பிக்க மத்திய அரசிடம் அந்நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. இந்த உரிமம் 10 ஆண்டுகாலத்துக்குரியதாகும்.
இத்தகைய சேனல் ஒளிபரப்புகளுக்கு உள்துறை அமைச்சகத்திடம் இருந்து 'பாதுகாப்பு அனுமதி' பெறுவது என்பது அவசியம். தற்போது சன். டிவி.யின் 33 சேனல்களின் ஒளிபரப்புக்கான 'பாதுகாப்பு அனுமதி' வழங்க உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.
இது தொடர்பான விளக்க கடிதத்தை ஒளிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது. இதன் மீது ஒளிபரப்புத் துறை அமைச்சகம் இறுதி முடிவெடுக்க உள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு அனுமதி மறுப்பை ஏற்று ஒளிபரப்புத் துறை அமைச்சகமும் சன் குழுமத்தின் 33 சேனல்கள் ஒளிபரப்புக்கான லைசன்ஸை புதுப்பிக்க மறுத்து ரத்து செய்தால் அந்நிறுவனத்துக்கு மிகப் பெரிய நெருக்கடி ஏற்படும் என்று கூறப்படுகிறது.