காஷ்மீரில் 10,000 பேர் கூடி பெரும் போராட்டம் வெடித்தது என்ற 'ராய்ட்டர்ஸ்'! அரசு அதிரடி மறுப்பு
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை எதிர்த்து, 10,000 பேர் ஒன்றுகூடி பெரும் போராட்டம் நடத்தியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியை, மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துவிட்டு, லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக அவற்றை மாற்றும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குடியரசு தலைவரும் இதற்கு அங்கீகாரம் அளித்துள்ளார்.
இந்த நிலையில், ஸ்ரீநகர் சவுரா பகுதியில், சுமார் பத்தாயிரம் போராட்டக்காரர்கள் கூடியதாகவும், இதில் ஆண்கள், பெண்கள் இருந்ததாகவும், போலீஸ் அதிகாரிகள் வட்டாரம் மற்றும், 2 நேரில் கண்ட சாட்சியங்கள் தகவல் சொல்லியதாக, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. இது சர்வதேச செய்தி நிறுவனமாகும்.
போராட்டத்தை கலைக்க பாதுகாப்பு படையினர், கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாகவும், பெல்லட் குண்டுகளை பயன்படுத்தி சுட்டதாகவும், குண்டடி பட்டவர்கள், ஷேர்-இ--காஷ்மீர் இன்ஸ்ட்டிடியூட்டில் சிகிச்சை பெறுவதாகவும், போராட்டத்தை கலைக்க பாதுகாப்பு படையினர் முயன்றபோது, பெண்களும், குழந்தைகளும் ஏரி தண்ணீருக்குள் குதித்ததாகவும் கூட அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
MHA Spokesperson: There are media reports claiming there was a protest involving 10,000 people in Srinagar.This is completely fabricated & incorrect. There have been a few stray protests in Srinagar/Baramulla and none involved a crowd of more than 20 people pic.twitter.com/fesONQ3xhX
— ANI (@ANI) August 10, 2019
ஆனால் இந்த செய்தியை மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. இது முற்றிலும் தவறான, கற்பனையாக உருவாக்கப்பட்ட செய்தி. ஸ்ரீநகர், பாராமுல்லாவில் சிறு சிறு போராட்டங்கள் நடந்தன. அதுவும் கூட 20 பேருக்கும் அதிகமாக கூடவில்லை. மற்றபடி 10,000 பேர் கூடி போராடியதாக கூறும் செய்தியில் உண்மையில்லை. இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.