நாடு முழுவதும் மைக்ரோ ஏடிஎம்கள்... பணத்தை எளிதாக எடுக்கலாம் - சக்தி காந்ததாஸ் உறுதி
நாடுமுழுவதும் நடமாடும் மைக்ரோ ஏடிஎம்கள் அதிகரிக்கப்படும் என்று பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.
டெல்லி: கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கத்தில் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த செவ்வாய்க்கிழமையன்று இரவு பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார். இதனால், மக்கள் நாடு முழுவதும் வங்கிகள் முன் பணத்தை மாற்றிச்செல்ல குவிந்துள்ளனர். ஏடிஎம்களில் பணம் எடுக்கவும் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
வங்கிகளில் பணம் எடுக்க 4000 என்ற வரையறை 4500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் வங்கி கணக்கில் இருந்து 20,000 ரூபாய் எடுத்துக் கொள்ளலாம் என்ற வரையறை மாற்றம் செய்யப்பட்டு 24,000 ரூபாய் அளவு எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் நாள் ஒன்றுக்கு 10,000 ரூபாய் என்ற வரையறை நீக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் வகையில் ஏடிஎம்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் ஓரிரு நாட்களில் ஏடிஎம்களில் புது 2000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஏடிஎம்களில் மூன்று அடுக்குகளில் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் அடுக்கப்பட்டிருக்கும் என்றும், ஒரு அடுக்கில் மட்டுமே 100 ரூபாய் இருக்கும் என்றும் கூறிய சக்தி காந்த தாஸ், இப்போது 100 ரூபாய் உள்ள அடுக்கு மட்டுமே செயல்படுவதால் பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் கூறினார்.
விரைவில் இந்த குறைகள் களையப்படும் என்றும், நாடுமுழுவதும் கூடுதல் ஏடிஎம் மையங்கள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே போல் நடமாடும் மைக்ரோ ஏடிஎம்கள் அதிகரிக்கப்படும் என்றும் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
புதிய ரூ.500 நோட்டுக்கள் விநியோகிக்கப்பட்டு, புழக்கத்திற்கு வந்துள்ளன. பணபரிவர்த்தனை தொடர்பாக மக்கள் எவ்வித பீதியும் அடைய வேண்டாம். போதிய அளவில் பணம் இருப்பதாக ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்துள்ளது.
ஊரகப் பகுதிகளில் நிதி சேவை எளிதாக கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார். அதற்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள தபால் அலுவலகங்களில் மைக்ரோ ஏடிஎம் மற்றும் ஏடிஎம் மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று கூறினார் அருண் ஜெட்லி.
இந்திய தபால் துறைக்கு கிராமப்புறங்களில் மட்டும் 1,30,000 தபால் நிலையங்கள் உள்ளன. கடந்த 2015ம் ஆண்டு புள்ளிவிவரப்படி, வங்கிகளுக்கு நாடு முழுவதும் 1.93 லட்சம் ஏடிஎம் மையங்கள் உள்ளன. அவற்றில், 33,249 மையங்கள் கிராமப்புறங்களிலும், 51,925 மையங்கள் நகர்புறப் பகுதிகளிலும் உள்ளன.
பணத்தட்டுப்பாடு
பணத்திற்குத் தடை, சில்லறை தட்டுப்பாடு காரணமாக தற்போது கிராமங்களில் உள்ள மக்களும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களின் சிரமத்தைப் போக்கவே மைக்ரோ ஏடிஎம்களை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார் பொருளாதார விவகாரத்துறை செயலர் சக்தி காந்த தாஸ். ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட இந்த மைக்ரோ ஏடிஎம் மெசின்கள், வங்கிக்கு வர முடியாத வாடிக்கையாளர்களை நாடி வரும். வாடிக்கையாளரின் ஆதார் எண் இணைக்கப்பட்டிருப்பதால் இந்த மைக்ரோ ஏடிஎம்களை கையாள்வது எளிது. இதை கைகளில் எடுத்துச் செல்லலாம்.
மைக்ரோ ஏடிஎம்
மைக்ரோ ஏடிஎம் என்பது சிறிய வடிவிலான ஆன்லைன் வங்கிச் சேவையாகும். இந்த மைக்ரோ எடிஎம்ஐ எங்கு வேண்டுமானாலும் எளிதாக எடுத்துச் செல்லாம். இந்த சேவையின் மூலமாக வங்கி கணக்கு வைத்துள்ள பயனாளர்கள் பணம் எடுத்துதல், பணத்தை வங்கி கணக்கில் செலுத்துதல், கடன் வாங்குதல் , கடன் வசூலித்தல் போன்ற பணப்பரிமாற்ற நடவடிக்கைகளை எளிதாக மேற்கொள்ள இயலும்.
பணப்பரிமாற்றம்
இந்த சேவையானது மிகவும் பாதுகாப்பு அம்சங்கள் கொண்டது ஆகும். இந்த மைக்ரோ ஏடிஎம் மூலம் பண பரிமாற்றம் மேற்கொள்ள பயனாளர்கள் வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டும். மேலும் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது ஆதார் எண் , மொபைல் எண்ணை வங்கி கணக்கில் இணைப்பதன் மூலமாக நாம் பணப்பரிமாற்றத்தை சாமான்ய மனிதனும் எளிதாக மேற்கொள்ளலாம்.
மத்திய அரசு நடவடிக்கை
இவ்வாறு மேற்கொள்ளப்படும் பண பரிமாற்ற நடவடிக்கைகளுக்கு உரிய ரசீது வழங்கப்படும். இந்த சேவையானது ஏடிஎம் மையங்கள் குறைவாக உள்ள கிராமப்புற மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இப்போது உள்ள பணத்தட்டுப்பாடு பிரச்சினைக்கு மைக்ரோ ஏடிஎம்கள் கை கொடுக்கும் என்று மத்திய அரசு நினைக்கிறது எனவேதான் நாடு முழுவதும் நடமாடும் மைக்ரோ ஏடிஎம்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் சக்தி காந்தாஸ் கூறியுள்ளார்.