மக்கள் அச்சப்பட வேண்டாம்... பணம் இருப்பு உள்ளது... வணிகர்கள் இனி 50000 எடுக்கலாம்- சக்தி காந்த தாஸ்
பெட்ரோல் பங்குகள், மருத்துவமனைகள், மருந்தகங்களிலும் அனைத்து அரசு சேவைகளுக்கு நவம்பர் 24 வரை பழைய ரூபாய் நோட்டுக்கள் ஏற்கப்படும் என்று சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.
டெல்லி: வங்கிகளில் இருந்து ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டது, 50000 வரை வங்கிக்கணக்கில் இருந்து வணிகர்கள் பணம் எடுக்கலாம் என்று பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். கடந்த சில நாட்களில் 3 லட்சம் கோடி வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்றும் மக்களுக்கு 50 ஆயிரம் கோடி பணம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது என்றும் சக்தி காந்த தாஷ் கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சக்தி காந்த தாஸ், நவம்பர் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை ரூ.50,000 கோடி பணம் விநியோகிக்கப்பட்டுள்ளது என்றார். பண பரிவர்த்தனைகள் அரசால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மக்களுக்கு பணம் செல்லும் அனைத்து வழிகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பணம் எடுப்பது, மாற்றுவது எளிதாக்கப்பட்டுள்ளது. விரைவாக பணம் எடுப்பதற்காக நாடு முழுவதும் மைக்ரோ ஏடிஎம்கள் நிறுவப்படும். பணபரிவர்த்தனையை கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்படும் என்று கூறினார்.
சக்தி காந்த தாஸ் அளித்த பேட்டியின் முக்கிய அம்சங்கள்:
•பெட்ரோல் நிலையங்களில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த அவகாசம் நவம்பர் 24ம் தேதி வரை நீடிக்கப்பட்டிருக்கிறது. அனைத்து அரசு சேவைகளுக்கும் பழைய நோட்டுகளை பயன்படுத்தலாம்
•போதிய அளவு ரூபாய் நோட்டுக்கள் நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
•மருத்துவமனைகள், மருந்தகங்களில் நவம்பர் 24 வரை பழைய ரூபாய் நோட்டுக்கள் ஏற்கப்படும்.
•வணிகர்கள் தங்களின் வங்கி நடப்புக்கணக்கில் இருந்து ரூ. 50000 வரை எடுத்துக்கொள்ளலாம்.
•போதிய அளவு பணம் இருப்பதால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
•வங்கிச் சேவைகள் மக்களிடம் முழுமையாக சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க குழுக்கள் அமைப்பு.
•நடமாடும் ஏடிஎம்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
•இணையவழி சேவைக்கட்டணம் ரத்து செய்யப்படுகிறது.
•மக்களுக்கு விரைவாகவும் எளிதாகவும் பணம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
•முக்கிய மருத்துவமனைகளில் மொபைல் பேங்கிங் சேவை வேன்களை அமைக்க வங்கிகளை கேட்டுக் கொண்டுள்ளோம்.
•புதிய ரூ.500 நோட்டுக்கள் விநியோகிக்கப்பட்டு, புழக்கத்திற்கு வந்துள்ளன. சிறிய தொகையிலான ரூபாய் நோட்டுக்களையும் விநியோக்க வங்கிகளை கேட்டுள்ளோம். கிராமப்புறங்களில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர், கிளை தபால் நிலையங்களிலும் பணத்தை டெபாசிட் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
•3 மாதங்களுக்கு பரிவர்த்தனை உள்ள நடப்பு கணக்கு வைத்திருக்கும் கம்பெனிகள், வாரத்திற்கு ரூ.50,000 வரை பணம் எடுத்துக் கொள்ளலாம். இதுவரை ரூ. 3 லட்சம் கோடி பழைய நோட்டுக்கள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன.
• டெபிட், கிரெடிட் கார்டு பணபரிவர்த்தனை மீது விதிக்கப்படும் கட்டணங்களில் சலுகை அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்.
•தினமும் பலமுறை பணபரிவர்த்தனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
•ஏடிஎம்.க்களை மாற்றி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் இன்னும் சில வாரங்களில் நிறைவடையும்.
•பணபரிவர்த்தனை தொடர்பாக மக்கள் எவ்வித பீதியும் அடைய வேண்டாம். போதிய அளவில் பணம் இருப்பதாக ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்துள்ளது.
•1.3 லட்சம் தபால் அலுவலங்களும் பழைய நோட்டுக்களை மாற்றித் தரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
• மக்களின் வசதிக்காக அனைத்து வங்கிகள், தபால் நிலையங்கள், ஏடிஎம்கள், இ-பே முறைகளும் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
•சில்லறைத் தட்டுப்பாட்டை போக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
•நாளை முழுவதும் அனைத்து ஏடிஎம்களிலும் 2000 ரூபாய் நோட்டுக்கள் கிடைக்கும். நாடு முழுவதும் ஒரே நாளில் அனைத்து ஏடிஎம்களில் இருந்து 2000 நோட்டை பெறலாம் என்றும் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.