லைசன்ஸ் உள்ள சாப்ட்வேர்தானா?.. பாஜக உறுப்பினர் அலுவலகத்தில் சோதனை நடத்திய மைக்ரோசாப்ட்!
பாஜக கட்சியை சேர்ந்த வினித் கோயங்கா நடத்தும் மும்பை அலுவலகம் ஒன்றில் மைக்ரோசாப்ட் நிறுவனம் சோதனை நடத்தி இருக்கிறது.
மும்பை: பாஜக கட்சியை சேர்ந்த வினித் கோயங்கா நடத்தும் மும்பை அலுவலகம் ஒன்றில் மைக்ரோசாப்ட் நிறுவனம் சோதனை நடத்தி இருக்கிறது. அந்த அலுவலகத்தில் இருக்கும் மைக்ரோசாப்ட் சாப்ட்வேர் முறையாக லைசன்ஸ் வாங்கியதா என்பதை சோதிக்க இப்படி செய்து இருக்கிறார்கள்.
பொதுவாக மைக்ரோசாப்ட் நிறுவனம் பெரிய நிறுவனங்களில் இப்படி அடிக்கடி சோதனை நடத்துவது வழக்கம். அவர்கள் பயன்படுத்தும் கணினியில் உண்மையில் லைசன்ஸ் பெறப்பட்ட மைக்ரோசாப்ட் சாப்ட்வேர் பயன்படுத்தப்படுகிறதா என்று சோதனை செய்வார்கள்.
இதை ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு நிறுவனம் மைக்ரோசாப்ட் உடன் ஒப்பந்தம் செய்து நடத்தும். இந்தியாவில் கேபிஎம்ஜி என்ற நிறுவனம்தான் இந்த சோதனையை நடத்தி வருகிறது. அதன்படி அவர்கள் சிலநாட்கள் முன்பு பாஜக கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான வினித் கோயங்கா அலுவலகத்தில் சோதனை நடத்தியுள்ளனர்.
இதில் சில கணினிகள், உண்மையில் லைசன்ஸ் பெறப்பட்டு உருவாக்கப்பட்டவையில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு வினித் தற்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்கு பாஜக கட்சியை சேர்ந்த சில முக்கிய உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்திய செயலாளர் ராஜிவ் சௌதி பாஜக கட்சியிடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார். ஆனால் பாஜக கட்சி இவர்கள் மீது வழக்கு தொடுக்க உள்ளது. இதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.