முஸ்லிம்களுக்கு 4.5% இடஒதுக்கீடு- தலித் சிறுபான்மையினருக்கு "எஸ்.சி" அந்தஸ்து: காங். வாக்குறுதி
டெல்லி: லோக்சபா தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் சிறுபான்மையினர் வாக்குகளை ஒட்டுமொத்தமாக தக்க வைத்துக் கொள்ள அடுத்த அஸ்திரத்தை காங்கிரஸ் ஏவிக் கொண்டிருக்கிறது.
லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை ஏற்கெனவே வெளியிடப்பட்டு விட்டது. இந்த நிலையில் துணை தேர்தல் அறிக்கை ஒன்றை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
அதில் சிறுபான்மையினர் மேம்பாடு என்ற பகுதியில், தற்போது இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் முஸ்லிம்களுக்கு 4.5% இடஒதுக்கீடு வழங்க வகை செய்வோம் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே மன்மோகன்சிங் அரசால் இந்த 4.5% இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டிருந்த போதும் நீதிமன்றங்களால் அது முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தலித் சிறுபான்மையினர் அனைவரையுமே "தாழ்த்தப்பட்டோர்" பட்டியலில் சேர்ப்போம் என்ற புதிய உறுதிமொழியையும் காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது. தற்போது ஹிந்துக்கள் மற்றும் புத்தமதத்தினருக்குத்தான் தாழ்த்தப்பட்டோர் சலுகை உண்டு.
இனி முஸ்லிம்கள் மற்றும் கிறித்துவர்களும் இந்த சலுகையை அனுபவிக்க வழிவகை செய்வோம் என்கிறது காங்கிரஸ். ஆனால் மதங்களின் அடிப்படையில் இப்படி தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க பாரதிய ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அதேபோல் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தையும் உரிய முறையில் நிரப்புவதற்கு காங்கிரஸ் கட்சி உறுதி அளித்திருக்கிறது. மேலும் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மதமோதல் தடுப்பு மசோதாவை முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றுவோம் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.