தரையிறக்கப்பட்ட சுகோய்-30 போர் விமானங்கள் மீண்டும் பறக்கும்: விமானப் படை தளபதி
டெல்லி: புனே அருகே நிகழ்ந்த விபத்து காரணமாக, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, 'சுகோய் - 30' ரக போர் விமானங்கள், ஒரு வார காலத்திற்குள் மீண்டும் செயல்படத் துவங்கும்,'' என, விமானப்படை தளபதி அரூப் ராகா தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தயாரிப்பான, 'சுகோய் - 30' ரக போர் விமானங்கள், விமானப்படையில் அதிக அளவில் உள்ளன. கடந்த மாதம், மகாராஷ்டிர மாநிலம், புனே அருகே, பயிற்சியில் ஈடுபட்டிருந்த சுகோய் - 30 ரக விமானம், இயந்திரக் கோளாறு காரணமாக, திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. அதில் பயணித்த, இரு விமானிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதையடுத்து, சுகோய் விமானங்களின் எஞ்ஜின்களை, இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவன விமான பொறியாளர்கள் பரிசோதிக்கத் துவங்கினர். இந்த பரிசோதனைகள் மூன்று வாரங்களாக நடைபெற்றன. பரிசோதனை முடிவடைந்துள்ளதை அடுத்து மீண்டும் பறக்கத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விமானப்படை தளபதி அரூப் ராகா, ரஷ்ய தயாரிப்பான சுகோய் விமானங்கள், 2009 முதல், அடிக்கடி விபத்துக்கு உள்ளாயின. புனேயில், அக்டோபர், 14ஆம் தேதி, சுகோய் ரக விமானம் விழுந்து நொறுங்கியது விபத்தில் இருக்கைகள் தானாக தீப்பிடித்ததே, விபத்திற்கு காரணம் என, விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனால், அந்த ரக விமானங்களின் செயல்பாடுகள், மூன்று வாரங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
விமானங்களின் விபத்திற்கான காரணம் கண்டறியப்பட்டதால், இனி, அதுபோன்ற பிரச்னை வர வாய்ப்பு இல்லை. மீண்டும் சுகோய் ரக போர் விமானங்கள், ஒரு வார காலத்திற்குள் மீண்டும் செயல்படத் துவங்கும் என்று அரூப் ராகா தெரிவித்தார்.