"கொலை, கொள்ளையில் ஈடுபட்ட இந்திய ராணுவம்"- மத்திய அமைச்சர் வி.கே.சிங் பகீர் குற்றச்சாட்டு
டெல்லி: இந்திய ராணுவம், கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டதாகவும், அவர்களை பாதுகாத்தவர்தான் அடுத்த ராணுவ தளபதியாக பொறுப்பேற்க உள்ள தல்பிர் சிங் சுகாஹ் என்றும், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
தற்போதைய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங், ராணுவ தளபதியாக பதவி வகித்தபோது, தனக்கு அடுத்த ரேங்கில் இருந்த தல்பிர் சிங்சுஹாக்கிற்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருந்தார். இது உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை என்று மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் இரு நாட்களுக்கு முன்பு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது.
அமைச்சருக்கு எதிராக அரசே விமர்சனம் செய்துள்ளதால் காங்கிரஸ் கட்சி இதை அரசியல் ஆயுதமாக்கியுள்ளது. தல்பிர் சிங் சுஹாக் நாட்டின் ராணுவ தளபதியாக பொறுப்பேற்க உள்ள நிலையில் இந்த விவகாரம் மேலும் அனல் பறக்கிறது.
ஆனால் தல்பிர் சிங்கை, விமர்சனம் செய்து, வி.கே.சிங் ட்விட் செய்துள்ளார். தனது ஒரு ட்விட்டில், "ராணுவ படைப்பிரிவு ஒன்று, அப்பாவிகளை கொலை செய்து, கொள்ளையடித்து வந்தாலும், அதை அந்த பிரிவின் தலைவர் கண்டுகொள்ளாமல் தனது வீரர்களை பாதுகாத்தாலும், அந்த தலைவரை விமர்சனம் செய்ய கூடாதா? கிரிமினல்களை அப்படியே போகவிட்டுவிடுவதுதானா?" என்று கூறியுள்ளார். அசாமில் நடந்த ஒரு கொள்ளை சம்பவத்தில் ராணுவத்துக்கு தொடர்புள்ளதாகவும், அப்போது அந்த படைப்பிரிவின் தலைவராக தல்பிர்சிங் பதவி வகித்ததையும் சுட்டிக்காட்டி வி.கே.சிங் இவ்வாறு விமர்சனம் செய்துள்ளார்.
2011ம் ஆண்டு அசாம் மாநிலம் ஜோர்காட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் தண்டிக்கப்பட்டு, பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர்களின் உயர் அதிகாரியாக இருந்த தல்பிர் சிங் சுகாஹ் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சம்பவ காலத்தில் அவர் விடுப்பில் இருந்ததால் நடவடிக்கைகளில் இருந்து தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தன்னிடம் கலந்து ஆலோசிக்காமலேயே, வி.கே.சிங்கை விமர்சனம் செய்யும் பிரமாணப்பத்திரத்தை கோர்ட்டில் தாக்கல் செய்ததற்காக பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் அத்துறை அமைச்சரான அருண்ஜெட்லி கடிந்து கொண்டுள்ளார். பிரமாணப்பத்திரத்தின் முழு அம்சங்களையும், தன்னிடம் காண்பித்திருந்தால், வி.கே.சிங்கிற்கு எதிராக உள்ள வார்த்தைகளை மேலும் மென்மையாக்கியிருக்க வாய்ப்பு இருந்தது. இதன் மூலம் தேவையில்லாத விமர்சனங்கள் எழுந்திருக்காது என்று அருண்ஜெட்லி தனது துறை அதிகாரிகளிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.