தாவூத் அட்ரஸ் இல்லை... ஆனா, பாகிஸ்தான்ல தான் இருக்காரு: உள்துறை இணை அமைச்சர்
டெல்லி: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கியக் குற்றவாளியான தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் தான் உள்ளார், ஆனால், அவர் தங்கியிருக்கும் வீட்டு விலாசம் தெரியாது என மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
1993ஆம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. மும்பையை உருக்குலைக்கும் வகையில் 13 இடங்களில் நிகழ்த்தப்பட்ட இக்குண்டுவெடிப்புகளில் 257 பேர் பலியாகினர். 700க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களில், தாவூத் இப்ராஹிம் முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். பாகிஸ்தானில் அவர் தலைமறைவாக இருப்பதாகவும், அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் அவருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மக்களவையில் பாஜக எம்.பி. நித்தியானந்த் ராய் தாவூத்தின் இருப்பிடம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் ஹரிபாய் சவுத்ரி, ‘தாவூத் எங்கேயிருக்கிறார் என்பது தெரியவில்லை. அவர் இருக்குமிடம் தெரியவந்தால், அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை தொடங்கும்' என பதிலளித்தார்.
தற்போதைய பாஜக அரசும், அதற்கு முன் மத்தியில் ஆட்சி செய்த அரசுகளும் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் தான் பதுங்கியுள்ளதாக கூறி வந்த நிலையில், ஹரிபாய் சவுத்ரியின் பேச்சு கடும் விமர்சனத்திற்கு ஆளானது.
அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக இன்று மக்களவையில் மீண்டும் விளக்கம் அளித்தார் ஹரிபாய். அதில் அவர், தாவூத் இருப்பிடம் பற்றிய தனது முந்தைய தகவலை திருத்தி வாசித்தார். அதாவது, ‘தாவூத் தங்கியிருக்கும் வீட்டின் முகவரி தெரியவில்லை. ஆனால் பாகிஸ்தானில்தான் இருக்கிறார். இதில் எந்த குழப்பமும் இல்லை' என ஹரிபாய் தெரிவித்தார்.