தாவூத்தைக் காலி செய்ய இந்தியா திட்டமிடவில்லை... மத்திய அமைச்சர் மறுப்பு
டெல்லி: தாதா தாவூத் இப்ராகிமை பாகிஸ்தானுக்குள் புகுந்து கொலை செய்யவோ அல்லது பிடித்து வரவோ இந்தியாவிடம் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோர் கூறியுள்ளார்.
இந்தியா இதுதொடர்பாக ரகசியத் திட்டம் தீட்டி வருவதாக வெளியான தகவலையும் அவர் மறுத்துள்ளார்.
முன்னதாக 1993ம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பைத் திட்டமிட்டு நடத்திய தாவூத் இப்ராகிமை பிடித்து வர இந்தியா ரகசியத் திட்டம் தீட்டி வருவதாக ராஜ்யவர்த்தன் ரத்தோர் கூறியதாக செய்திகள் வெளியாகின.
தற்போது இதை மறுத்து டிவிட் போட்டுள்ளார் ரத்தோர். அதில், நான் சொன்னதை தவறாகப் போட்டுள்ளனர். தாவூத்தைப் பிடிப்பது தொடர்பாக எந்த தகவலையும் நான் தரவில்லை. அதுதொடர்பாக நான் எதுவும் பேசவும் இல்லை என்று கூறியுள்ளார் ரத்தோர்.
இருப்பினும் ஒரு டிவிக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில், மணிப்பூர் தாக்குதலைப் போல தாவூத்துக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படுமா என்று கேட்டால் நாம் அதைச் செய்யலாம். இருப்பினும் அதை பொது இடத்தில் விவாதிக்க முடியாது என்று பதிலளித்திருந்தார் ரத்தோர்.
மேலும் அவர் கூறுகையில், நாம் அதைச் செய்யலாம், செய்யாமலும் போகலாம். அது அரசைப் பொறுத்து. அது ரகசிய நடவடிக்கையாகவும் இருக்கலாம், சிறப்பு அதிரடித் தாக்குதலாகவும் இருக்கலாம். இருப்பினும் இதுகுறித்து இதுவரை விவாதிக்கப்படவில்லை என்று கூறியிருந்தார் ரத்தோர்.