மைசூரு சாமுண்டிஸ்வரி கோயிலுக்கு வெள்ளி யானை.. வேண்டுதல் நிறைவேறியதால் அமைச்சர் காணிக்கை!
வருமான வரித்துறை ரெய்டில் சிக்கிய அமைச்சர் சிவக்குமார் மைசூரு சாமுண்டிஸ்வரி கோயிலுக்கு 2 வெள்ளி யானைகளை காணிக்கையாக வழங்கியுள்ளார்.
மைசூரு: வருமான வரித்துறை ரெய்டில் சிக்கிய அமைச்சர் சிவக்குமார் மைசூரு சாமுண்டிஸ்வரி கோயிலுக்கு 2 வெள்ளி யானைகளை காணிக்கையாக வழங்கியுள்ளார்.
கர்நாடக மாநில எரிசக்தி துறை அமைச்சராக இருப்பவர் சிவக்குமார். அண்மையில் இவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர்.
இதனால் அமைச்சர் சிவக்குமார் நாடு முழுவதும் பரிட்சயம் ஆனார். இந்நிலையில் நேற்று அமைச்சர் சிவக்குமார் சாமுண்டிஸ்வரி கோயிலுக்கு காணிக்கை அளித்துள்ளார்.
31 கிலோ எடை வெள்ளி யானைகள்
31 கிலோ எடைகொண்ட இரட்டை வெள்ளி யானைகளை அமைச்சர் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கினார். தனது வேண்டுதல்களில் ஒன்று நிறைவேறியதால் இந்த வெள்ளி யானைகளை வழங்கியதாக கூறினார்.
துலாபாரமும் உண்டு
இந்த யானைகள் ஏற்கனவே வழங்கப்பட்டது என்று கூறிய அவர், தற்போது அவற்றில் சேதம் ஏற்பட்டதால் சரிசெய்து கொடுத்துள்ளதாக கூறினார். இதைத்தொடர்ந்து துலாபாரம் தரஉள்ளதாகவும் அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.
எப்போதும் பாதுகாத்து வருகிறார்
தன்னை எப்போதும் சாமுண்டிஸ்வரி பாதுகாத்து வருவதாகவும் அவர் கூறினார். ஆனால் தனது வேண்டுதல் குறித்து கூற அமைச்சர் மறுத்துவிட்டார்.
தான் யாரையும் ஏமாற்றவில்லை
மேலும் தான் யாரையும் ஏமாற்றவும் திருடவும் இல்லை என்றும் அமைச்சர் சிவகுமார் கூறினார். அமைச்சர் சிவகுமார் அண்மைக்காலமாக தொடர் சர்ச்சையில் சிக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.