தீவிரவாத தாக்குதலில் 17 ராணுவத்தினர் பலி.. பாரிக்கர், தளபதி தல்பீர் சிங் ஸ்ரீநகர் விரைந்தனர்
ஸ்ரீநகர்: காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 ராணுவத்தினர் பலியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் அசாதாரண நிலை நிலவுகிறது. மத்தியபாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் மற்றும் ராணுவத் தலைமைத் தளபதி தல்பீர் சிங் ஆகியோர் ஸ்ரீநகர் விரைந்துள்ளனர்.
காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிக்கு அருகில் உள்ளது யூரி. இங்கு ராணுவ நிர்வாகத் தலமையகம் உள்ளது. அங்கு இன்று அதிகாலை தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். ராணுவத்தினர் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதலை நடத்திய 4 தீவிரவாதிகளையும் ராணுவம் சுட்டுக் கொன்றது. ஆனால் நமக்குத்தான் பேரிழப்பு ஏற்பட்டு விட்டது.
17 ராணுவ வீரர்கள் இந்த கடும் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.ஜம்மு காஷ்மீர் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. நமது தரப்பில் உயிரிழப்பு அதிகரித்துள்ளதால் மத்திய அரசும், ராணுவமும் அதிர்ச்சி அடைந்துள்ளன. கடந்த பல மாதங்களாகவே காஷ்மீர் தகித்துக் கொண்டுள்ளது. பிரிவினைவாதத் தலைவர் புர்ஹான் வானியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றது முதல் அங்கு போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்தநிலையில் இந்திய ராணுவத்தினரை மிகப் பெரிய அளவில் அதிர்ச்சிக்குள்ளாக்கும் தாக்குதலை தீவிரவாதிகள் இன்று நடத்தயுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், ராணுவத் தலைமைத் தளபதி தல்பீர் சிங் ஆகியோர் ஸ்ரீநகர் விரைந்துள்ளனர். அங்கு ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராணுவத்தினரைச் சந்தித்து நலம் விசாரிக்கவுள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் தனது ரஷ்ய மற்றும் அமெரிக்க பயணத்தை ரத்து செய்து விட்டு காஷ்மீர் மாநில ஆளுநர், முதல்வர் ஆகியோருடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளார்.
இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா அமைப்பு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதற்கு முன்பு சில மாதங்களுக்கு முன்பு பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டிலும் இதேபோலத்தான் விமானப்படைத் தளத்திற்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்கினர். அத்தாக்குதல் 3 நாட்கள் நீடித்தது. அதைத் தொடர்ந்து இப்போது இந்திய பாதுகாப்பு அமைப்புக்குள் தீவிரவாதிகள் ஊடுறுவியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.