அலுவலகத்துக்கு ஆடி, அசைந்து வந்த 40 அரசு ஊழியர்கள்.. வீட்டுக்கு திருப்பியனுப்பிய மத்திய அமைச்சர்
டெல்லி: காலதாமதமாக அலுவலகம் வந்த தகவல் தொடர்பு துறை அமைச்சக அதிகாரிகள், ஊழியர்களை விடுமுறை எடுத்துவிட்டு வீட்டுக்கு செல்லுமாறு அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் உத்தரவிட்டார்.
தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் அலுவலகம் டெல்லி சாஸ்திரி பவனில் உள்ளது. இவரது அலுவலகத்துக்கு காலை 9 மணிக்கெல்லாம் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வர வேண்டும் என்பது உத்தரவு. அதேபோல அமைச்சர் காலை 9 மணிக்கெல்லாம் ஷார்ப்பாக அலுவலகம் வந்துள்ளார். ஆனால் நேராக தனது அறைக்கு செல்லாமல், அதிகாரிகள் அறைகளுக்கு விசிட் அடித்துள்ளார்.
என்னிடம் அனுப்புங்கள்..
அப்போதுதான், ஏகப்பட்ட அதிகாரிகளும், பணியாளர்களும் அலுவலகத்துக்கு வந்து சேராதது தெரியவந்தது. இதையடுத்து 9.15 மணிக்கு மேல் வரும் அதிகாரிகளை எனது அறைக்கு அனுப்புங்கள் என்று உத்தரவிட்டுவிட்டு தனது அறைக்கு வந்துள்ளார்.
காத்து கிடந்த ஊழியர்கள்
அரசு அதிகாரிகள் வழக்கம்போல, ஆடி, அசைந்து அலுவலகம் வந்துள்ளனர். அப்போதுதான், அமைச்சர் எச்சரித்து சென்ற தகவல் கிடைத்தது. இதையடுத்து அமைச்சர், அறைக்கு வெளியே அதிகாரிகள் நீண்ட வரிசையில் காத்துக்கிடந்தனர். மொத்தம் 40 ஊழியர்கள் இதுபோல காலதாமதமாக வந்துள்ளனர்.
கிளம்புங்கப்பா முதலில்..
இந்த ஊழியர்களை எச்சரித்த அமைச்சர், "இன்று நீங்கள் யாரும் வேலை செய்ய வேண்டாம். ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டுக்கு போங்கள். நாளை பார்த்துக்கொள்ளலாம்" என்று கோபத்துடன் கூறி திருப்பியனுப்பி விட்டார். இதனால் தொங்கிய முகத்தோடு, அரசு ஊழியர்கள் வீட்டுக்கு கிளம்பி சென்றனர்.
பிரதமர் உத்தரவு
அரசு பணிகளில் 'சிகப்புநாடா' என்ற பேச்சு வழக்கு உள்ளது. அதாவது, கோப்புகளை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த அரசு ஊழியர்கள் அளவுக்கு அதிகமாக காலதாமதம் செய்வார்கள். எனவே இதற்கு இப்படி ஒரு பெயர் வந்தது. இந்த சிகப்பு நாடா நிலையை ஒழிக்கவும், பணிகளை துரிதப்படுத்தவுமே, சரியான நேரத்துக்கு ஊழியர்கள் அலுவலகம் வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி உத்தரவிட்டுள்ளார்.
மோடி ஆய்வு
தனது உத்தரவு செயல்படுத்தப்படுகிறதா என்பதை பார்க்க பிரதமர் அலுவலக அதிகாரிகள் அறைகளுக்கு மோடி விசிட் அடித்து ஏற்கனவே ஆய்வுகள் செய்துள்ளார்.
வெங்கய்யாவும் விசிட்
இதேபோல மூத்த அமைச்சரான வெங்கய்யாநாயுடுவும் தனது துறை ஊழியர்கள் சரியான நேரத்துக்கு அலுவலகம் வருகிறார்களா என்பதை நேரில் சென்று பார்த்துள்ளார். காலதாமதமாக வந்த ஊழியர்களுக்கு அவர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.