ஆர்டிஐ மூலம் அமைச்சர்களை பொதுமக்கள் நேரடியாக கேள்வி கேட்கலாம்.. தகவல் ஆணையர்
டெல்லி: தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் கேள்வி கேட்டால், அமைச்சர்களும் பதில் சொல்ல வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பதில் சொல்லக் கூடியவர்கள் பட்டியலில் அமைச்சர்களும் இடம் பெற்றுள்ளனர் என்றும் தகவல் ஆணையம் கூறியுள்ளது. மத்திய மற்றும் மாநில அமைச்சர்களுக்கு இது பொருந்தும்.
இதன் மூலம் பொதுமக்கள் அமைச்சர்களுக்கு நேரடியாக கேள்வி கேட்டு பதிலைப் பெறக் கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:
மத்திய, மாநில அமைச்சர்கள்
மத்திய மாநில அரசுகள், ஒவ்வொரு அமைச்சருக்கும், ஒரு அதிகாரி அல்லது பொது தகவல் அதிகாரியை நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பதிலளிக்க கடமைப்பட்டவர்கள்
ஆர்டிஐ சட்டத்தின் கீழ் மத்திய அமைச்சர்கள் வர மாட்டார்கள், கேள்விகளுக்குப் பதிலளிக்கக் கூடிய வசதி இல்லை என்று கூறுவதை ஏற்க முடியாது. அமைச்சர் தனி நபர் என்று கூறுவதையும் ஏற்க முடியாது. அவர் மக்கள் பணியில்தான் உள்ளார். எனவே அவர் பதிலளிக்கக் கூடியவர்தான்.
ரகசியக் காப்புக்குப் பதில்
அமைச்சர்கள் பதவியேற்கும்போது ரகசியக் காப்பு என்பதற்குப் பதில் வெளிப்படைத் தன்மையைக் காக்கும் பிரமாணத்தையும் எடுக்க வேண்டும். அப்போதுதான் ஆர்டிஐ சட்டத்தை அவர்கள் மதிப்பார்கள்.
ராம ராஜ்ஜியத்திலேயே
ராமர் காலத்திலேயே பொதுமக்களின் குறைகளைத் தீர்க்க ஆர்டிஐ போன்ற ஒரு அமைப்பை வைத்துள்ளனர். ராமரின் அரண்மனைக்கு வெளியே ஒரு மணி கட்டப்பட்டிருந்ததாம். அதை அடித்து பொதுமக்கள் தங்களது குறைகளை மன்னரிடமே நேரடியாக கூற வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. எனவே நமது அமைச்சர்களும் மக்களின் குறைகளைக் கேட்க ஆர்டிஐ சட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் ஆச்சார்யலு.