அசைவம் சாப்பிடுபவர்கள் பருமனானவர்கள்... மத்திய சுகாதாரத்துறையின் ட்வீட்டால் சர்ச்சை!
சைவமா, அசைவமா எது உங்கள் தேர்வு என்று உடல்பருமனுக்கு அசைவம் சாப்பிடுவதே காரணம் என்று புகைப்படமாக வெளியிட்டிருந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
டெல்லி : சைவமா, அசைவமா எது உங்கள் தேர்வு என்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட புகைப்படம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அசைவம் சாப்பிடுபவர்கள் பருமனாக இருப்பதாகவும், சைவம் சாப்பிடுபவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பது போலவும் வெளியிடப்பட்ட அந்த பதிவிற்கு கண்டனங்கள் எழுந்ததையடுத்து சுகாதாரத்துறை அமைச்சகம் அந்தப் பதிவை நீக்கியுள்ளது.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தது. அதில் உங்களது தேர்வு என்ன சைவமா அல்லது அசைவமா என்று இரண்டு புகைப்படங்களைக் காட்டி ஒப்பிடுவது போல அமைந்துள்ளது.
ஒரு புகைப்படத்தில் இருக்கும் உருவத்தில் அசைவம், முட்டை, சீஸ் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் போடப்பட்டு அந்த படம் உடல்பருமனானதாகவும், மற்றொரு படத்தில் காய்கறி, பழங்கள் மட்டுமே சாப்பிடுபவர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் சீரான உடல்நிலையில் இருப்பது போலவும் வேறுபடுத்தி காட்டப்பட்டுள்ளது.
நல்ல ஆரோக்கியத்தை தேர்ந்தெடுங்கள்
நல்ல ஊட்டச்சத்து ஆரோக்கியமான வாழ்விற்கான திறவுகோல், இவற்றில் எது உங்கள் தேர்வு என்று கேட்டு ஸ்வஸ்தா பாரத், ஆயுஷ்மான் பாரத், அனைவருக்கும் ஆரோக்கியம் என்ற ஹேஷ்டேக்குகளும் பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்த புகைப்படங்கள் மூலம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அசைவம் சாப்பிடுபவர்கள் உடல் பருமனானவர்கள் என்று மறைமுகமாக சொல்வது பெரும் சர்ச்சையாக சமூக வலைதளத்தில் வெடித்தது.
முட்டை சாப்பிட்டால் உடல்பருமனா?
மத்திய சுகாதாரத்துறையின் இந்தப் பதிவு முட்டாள்தனத்தின் உச்சகட்டம். முட்டை, பாலாடைக்கட்டி ஆரோக்கியமற்றதா? எந்த அறிவியல் ஆய்வு இதனை உறுதி செய்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஏழை இந்தியர்கள் கிவி, அவகோடா, பெர்ரி பழங்களை வாங்கி சாப்பிட முடியுமா? அல்லது இது பணக்காரர்களுக்காக வெளியிடப்பட்ட விளம்பரமா என்று சமூக வலைதள பதிவர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
|
அசைவம் ஆரோக்கியமில்லையா?
ஆக மத்திய சுகாதாரத்துறை இந்த விளம்பரத்தின் மூலம் என்ன சொல்ல வருகிறது என்றால் முட்டை, கறி, மீன் சாப்பிட்டால் ஆரோக்கியமில்லை என்று கூறுகிறது. இது தான் மக்களுக்கு சுகாதாரத்துறை கூறும் உடல் ஆரோக்கிய ஆலோசனையா என்று கேள்வி எழுப்பியுள்ளார் மற்றொரு நெட்டிசன்.
|
குண்டாக இருப்பவர்கள் ஆரோக்கியமில்லாதவர்களா?
மெலிந்த உடல்கொண்ட பெண்மணி மோசமான உணவு சமநிலையை கொண்டுள்ளார், அவரது உடலில் போதுமான புரதச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்ஸ் இல்லை. முட்டை ஏன் பருமனான உடலில் போடப்பட்டிருக்கிறது, குண்டாக இருப்பவர்கள் ஆரோக்கியமில்லாதவர்கள் என்ற உங்களது அசட்டுத்தனமான கருத்துக்கு நன்றி. இந்திய அரசு எங்களுக்கு இப்படி ஒரு அங்கீகாரத்தை அளித்தற்கு நன்றி என்று இவர் ட்வீட்டியுள்ளார்.
பதிவு நீக்கம்
சைவ உணவு நல்லதா அசைவ உணவு நல்லதா என்ற விவாதத்தை ஏற்படுத்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் ட்வீட்டுக்கு சிலர் சைவம் மட்டுமே சாப்பிடுபவர்கள் ஏன் குண்டாக இருக்கிறார்கள் என்று சிலரின் புகைப்படங்களை பகிர்ந்து அக்கப்போர்களை கிளப்பி விட்டனர். இதனால் பெரும் சர்ச்சை வெடித்ததையடுத்து தனது பதிவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நீக்கியது. சைவமோ, அசைவமோ அவரவர் பழக்க வழக்கம் சார்ந்து உணவு முறையும் அமைகிறது, இதில் சைவமோ ஆரோக்கியமான உடலுக்கு நல்லது என்று தேவையில்லாத ஒரு பதிவை போட்டு தனக்குத் தானே சூன்யம் வைத்துக் கொண்டுள்ளது சுகாதாரத்துறை அமைச்சகம்.