2 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை- துப்பாக்கி முனையில் சிறுமியை சீரழித்த கயவர்கள்
புனே: குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தினால் மரண தண்டனை விதிக்கும் வகையில் போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. கடுமையான தண்டனை விதிக்கப்பட்டால் குற்றங்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாட்டில் பல பகுதிகளில் குழந்தைகள், சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. புனேயில் இரண்டு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேசத்தில் மைனர் சிறுமியை இரண்டு கயவர்கள் சீரழித்துள்ளனர். இந்த குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டத்தில் துப்பாக்கி முனையில் மைனர் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். ரேகன், மின்ட்டு என்ற இரண்டு பேர் இரவு நேரத்தில் சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது அடித்து இழுத்துக்கொண்டு போய் துப்பாக்கி முனையில் சீரழித்துள்ளனர். சிறுமியின் பெற்றோர்கள் போலீசில் அளித்த புகாரின் பேரின் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே புனேயில் இரண்டு வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றுள்ளனர். கூலித்தொழிலாளியின் குடும்பத்தினர் கட்டிடம் கட்டும் தொழில் செய்யும் இடத்தில் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கயவர்கள் சிலர் அந்த சிறுமியை கடத்திக் கொண்டு போய் சீரழித்துள்ளனர். சிறுமியை பெற்றோர்கள் தேடி வந்த நிலையில் செவ்வாய்கிழமை காலையில் சிறுமியில் சடலம் புதரில் கண்டெடுக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் சங்கவி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதே ஏரியாவைச் சேர்ந்தவர்கள் சிலரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தினாலோ பலாத்காரம் செய்தாலோ குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது. மத்திய அரசு போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதனை மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி ராஜ்யசபாவில் தாக்கல் செய்துள்ளார்.
மசோதாவை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் ஸ்மிருதி இராணி, சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை கிடைக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார். சிறார்களை ஆபாசப்படம் எடுக்கப்படுவது தொடர்பான குற்றங்களை தடுக்கும் வகையில் அந்த குற்றங்களை செய்பவர்களுக்கும் அபராதம் விதிக்கும் வகையில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறினார்.
குழந்தைகளின் ஆபாசப்படங்களை பகிரக்கூடாது ஆபாசப்படத்தை சேமித்து வைத்திருந்தாலே ரூ. 5000 அபராதம் விதிக்கப்படும். யாருக்காவது பகிர்ந்தாலோ காட்சிப்படுத்தினாலோ அபராதமும் தண்டனையும் கிடைக்கும் என்றும் ஸ்மிருதி இராணி கூறினார். அந்த ஆபாச படங்களை வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தினால் 3 வருடங்களுக்கு குறையாமல் சிறை தண்டனை கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். போக்சோ சட்டத்திருத்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இனியாவது சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறைகிறதா என்று பார்க்கலாம்.