மகளை பலாத்காரம் செய்த தந்தை... கர்ப்பிணி சிறுமிக்கு பிரம்படி கொடுத்த பஞ்சாயத்து - மகாராஷ்டிராவில்!
பன்வாட்: மகாராஷ்டிராவில் சொந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கும், அந்த சிறுமிக்கும் பிரம்படி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை தோற்றுவித்துள்ளது.
பாலியல் பலாத்காரம் செய்த தந்தையோடு சேர்த்து பாதிக்கப்பட்ட கர்ப்பிணியான சிறுமிக்கும் பஞ்சாயத்தார் பிரம்படி கொடுத்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம், சதாரா மாவட்டத்தில் உள்ள பன்வாட் கிராமத்தில் வசிக்கும் ஒருவர் 13 வயதாகும் தனது மகளை கடந்த 4 மாதமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.
இதனை அறிந்த கிராமத்தினர் அவருக்கு பிரம்படி தண்டனையும், அபராதமும் விதித்ததோடு, அவரால் பாலியல் சித்ரவதைக்கு உள்ளாகி, கர்ப்பிணியாக உள்ள பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் பிரம்படி தண்டனை வழங்கியுள்ளனர்.
அந்த கிராமத்தில் இரண்டு பேரையும் மாட்டைக் கட்டுவதுபோல் கயிற்றால் கட்டி கிராமத்தினர் முன்பு அவர்கள் பிரம்படி கொடுத்துள்ளனர். இதனால் அச்சிறுமி பயங்கரமாக காயமடைந்துள்ளார்.
கர்ப்பிணி என்றும் பாராமல் ஒரு சின்னஞ்சிறுமியை அவர் செய்யாத தவறுக்காக வதைத்த சம்பவம் மனித நேய ஆர்வலர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து போலீசார் அக்கிராமத்தில் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.