சிறுபான்மையினரும் சூர்ய நமஸ்காரம் செய்ய வேண்டும்: ம.பி. அமைச்சர்
போபால்: முஸ்லீம்களின் தொழுகையும் சூர்ய நமஸ்காரம் தான் என மத்திய பிரதேச மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பாராஸ் ஜெயின் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு கடந்த 2007ம் ஆண்டில் இருந்து சூர்ய நமஸ்கார நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பராஸ் ஜெயின் கூறுகையில்,
முஸ்லீம்களின் தொழுகையும் ஒருவித சூர்ய நமஸ்காரம் தான். சிறுபான்மையினரும் சூர்ய நமஸ்காரம் செய்ய வேண்டும். ஆனால் விருப்பம் இல்லாத மாணவர்கள் சூர்ய நமஸ்கார நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத் தேவை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
ஜெயினின் கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. மாநில அரசு சூர்ய நமஸ்கார நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. அந்த நிகழ்ச்சி நடக்க உள்ள நிலையில் ஜெயின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாஜக அமைச்சர்கள் ஏதாவது கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்குவது வழக்கமாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.