பாகிஸ்தான் தூதரை சந்தித்த ஹுரியத் தலைவர் மீர்வாய்ஸ் உமர் பரூக்!
டெல்லி: இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை ஜம்மு-காஷ்மீர் ஹுரியத் மாநாட்டு அமைப்பின் தலைவர் மீர்வாய்ஸ் உமர் ஃபரூக் டெல்லியில் நேற்று இரவு சந்தித்துப் பேசினார்.
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இன்று நடைபெற உள்ள தேசிய தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக, ஜம்மு-காஷ்மீரில் இருந்து மீர்வாய்ஸ் உமர் பாரூக் நேற்று டெல்லி வந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜம்மு காஷ்மீர் பிரச்னை என்பது அரசியல் ரீதியிலான பிரச்னை என்றே எங்கள் அமைப்பு கருதுகிறது. இதற்கு ராணுவம் மூலம் தீர்வு காண முடியாது என்றார்.
இதைத் தொடர்ந்து அவர் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை சந்தித்துப் பேசினார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே வெளியுறவுச் செயலர் நிலையில், அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது பாகிஸ்தான் அரசின் நிலைப்பாடு என்ன என்பதை அறிவதற்காக மீர்வாய்ஸ் அவரைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது