வெள்ளி கொலுசுக்காக 70 வயது பாட்டியின் காலை துண்டித்த திருடர்கள்... 5 பேர் கைது
இந்தூர்: வெள்ளி கொலுசை திருடுவதில் சிக்கல் ஏற்பட்டதால் மத்தியப்பிரதேசத்தில் மூதாட்டி ஒருவரின் காலை திருடர்கள் துண்டித்து சென்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் மேற்கு பகுதியில் வசிக்கும் பெண்கள், தங்கள் கால்களில் 'தண்டை' போன்ற கனமான வெள்ளி கொலுசுகளை அணிவது வழக்கம்.
அந்தவகையில், மத்தியப்பிரதேசம் தார் மாவட்டத்தில் உள்ள பகாடியா காட்டுப் பகுதியில் கஸ்தூரி பாய்(70) என்ற மூதாட்டி ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். கஸ்தூரி தனது காலில் வெள்ளியால் கனமான தண்டை அணிந்திருந்தார்.
அப்போது அங்கு வந்த திருடர்கள் சிலர் கத்தியை காட்டி மிரட்டி, கஸ்தூரியை கட்டிப் போட்டு விட்டு அவரது கொலுசை திருட முயற்சித்துள்ளனர். ஒரு கொலுசை கழற்றிய திருடர்களுக்கு மற்றொரு கொலுசை கழற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
தாமதப் படுத்தினால் ஊர் மக்களிடம் சிக்கிக் கொள்வோம் என அஞ்சிய திருடர்கள், சற்றும் ஈவிரக்கமின்றி அந்த மூதாட்டியின் காலை துண்டித்து, கொலுசை எடுத்துக் கொண்டு தலைமறைவானார்கள்.
பின்னர் ஊர் மக்களால் மீட்கப்பட்ட கஸ்தூரி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு அவரது நிலைமை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக பழைய குற்றவாளிகள் 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.