மங்களூரில் இரவோடு இரவாக மசூதியை தாக்கி சேதப்படுத்திய விஷமிகள்
பெங்களூர்: மங்களூரில் உள்ள மசூதி ஒன்றை விஷமிகள் தாக்கி சேதப்படுத்தியுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள பாஜ்பே அருகில் இருக்கும் பார்கோவ்டி த்வாராவில் மசூதி ஒன்று உள்ளது. திங்கட்கிழமை இரவு விஷமிகள் மசூதி மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் மசூதியின் கண்ணாடிகள் மற்றும் ஜன்னல்கள் உடைந்தன. விஷமிகள் மசூதியின் முன்பக்கத்தையும் சேதப்படுத்தியுள்ளனர். செவ்வாய்க்கிழமை காலை தொழுகைக்காக வந்தபோது தான் மசூதி சேதப்படுத்தப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து இந்த சம்பவம் பற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையே செய்தி அறிந்து மக்கள் மசூதிக்கு முன்பு கூடி விஷமிகளுக்கு எதிராக கோஷமிட்டனர். மசூதி தாக்கப்பட்டதால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு கூடியிருந்த மக்களை சமாதானம் செய்தனர்.
மசூதியை தாக்கியவர்களை கண்டுபிடித்து நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் வாக்குறுதி அளித்தனர். அதன் பிறகே மக்கள் அங்கிருந்து சென்றனர். இந்நிலையில் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
மசூதி இருக்கும் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.