மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்ய ஏவுகணை! திடுக் தகவல் அம்பலம்
டெல்லி: இரு வருடங்கள் முன்பு உக்ரைன் எல்லையில் வைத்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் ரஷ்யாவுக்கு தொடர்புள்ளதாக டச்சு நாட்டு விசாரணை குழு ஒன்று தெரிவித்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு ஜூலை மாதம் 17ம் தேதி, மலேசியாவிலிருந்து நெதர்லாந்துக்கு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானமான எம்.எச்.,17, கிழக்கு உக்ரைன் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இப்பகுதி ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் அவ்விமானத்திலிருந்த 283 பயணிகள் 15 விமான ஊழியர்கள் என மொத்தம் 298 பேர் பலியாகினர்.
இதுகுறித்து நெதர்லாந்து விசாரணைக் குழு தெரிவித்ததாவது: பெர்வோமாய்ஸ்கி என்ற கிராமத்தின் அருகேயுள்ள குறிப்பிட்ட திடல்தான் இந்த ஏவுகணை ஏவப்பட்ட தளம். ரஷ்ய தயாரிப்பான பி.யு.கே (புக்) ஏவுகணைகள், 9-எம்-83 வரிசை எண்ணைக் கொண்ட அந்த ஏவுகணையை வீசும் தளவாடம், ரஷ்யாவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாள் ஏவுகணையை இயக்கும் வாகனம் அங்கிருந்து ரஷ்யாவுக்கு திரும்பியுள்ளது. இடைப்பட்ட நேரத்தில் தாக்குதல் நடந்திருக்கிறது.
ரஷ்ய எல்லையிலிருந்து கிழக்கு உக்ரைனுக்குக் கொண்டு வரப்பட்டு, விமானத்தை சுட்டு வீழ்த்திய பிறகு மீண்டும் ரஷ்யாவுக்கே திருப்பி எடுத்துச் செல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. இவ்வாறு விசாரணை குழுவினர் தெரிவித்தனர்.
ஆனால், இந்த விமானம் வீழ்த்தப்பட்டதில் தங்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டினை உக்ரைன் போராளிகள் மீண்டும் மறுத்துள்ளனர். இதே போன்று ரஷ்யாவும் முன்பு இதை மறுத்து வந்தது. இனிமேல் என்ன செய்யும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.