புட்டபர்த்தி சாய்பாபா ஆசிரமத்துக்கு வந்த ஆஸ்திரேலிய பெண் கொன்று புதைப்பு: 3 பேர் கைது
புட்டபர்த்தி: புட்டபர்த்தி சாய்பாபா ஆசிரமத்தில் ஆஸ்திரேலியா பெண் பக்தையை கொலை செய்து புதைத்த மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டோனி ஆன்னி லட்கேத் (75) சாய்பாபாவின் தீவிர பக்தை. ஆண்டுதோறும் இவர் புட்டபர்த்திக்கு வந்து சில நாட்கள் தங்கியிருந்து பக்தர்களுக்கு சேவை செய்வது வழக்கம்.
இந்நிலையில் புட்டபர்த்தியில் உள்ள சாய் குடியிருப்பு வளாகத்தில் தங்கியிருந்த இவர், கடந்த செப்டம்பர் 20-ம் தேதியிலிருந்து காணவில்லை. ஆகஸ்டு 28-ஆம் தேதி பெங்களூர் செல்வதாக கிரேட்விடம் கூறிவிட்டு புறப்பட்டார். மறுநாள் முதல் அவரைக் காணவில்லை. அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. செப்டம்பர் 12-ஆம் தேதி வரை காத்து இருந்த சக தோழியான கிரேட் இது குறித்து புட்டபர்த்தி போலீசில் புகார் செய்தார்.
மேலும் ஆஸ்திரேலியாவில் உள்ள டோனியின் மகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து டோனி மகள் இந்திய தூதரகத்தில் புகார் செய்தார்.
இந்த நிலையில் போலீசார் தங்கள் விசாரணையை தொடங்கினர். குடியிருப்பு வளாக காவலாளி பகவன்துடு மீது சந்தேகம் ஏற்படவே போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் டோனியை அவர் கொன்று புதைத்தது தெரிய வந்தது.
பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில் எதிர் வீட்டு காவலாளி போட்டலய்யா உதவியுடன் டோனியை கொன்றதாகவும், பின்னர் சடலத்தை தனது மைத்துனர் உதவியுடன் காரில் ஏற்றி சொந்த கிராமமான பலமர்லா கிராமத்தில் புதைத்ததாகவும் பகவன் துடு கூறினார். டோனி வைத்திருந்த ரூ.20 ஆயிரம் பணத்தை திருடியதாகவும் கூறினார்.
இதையடுத்து நேற்று இரவு பலமர்லா கிராமத்துக்கு சென்ற போலீசார் ஒரு ஈஞ்சமரம் கீழே புதைக்கப்பட்ட டோனி உடலை தோண்டி எடுத்தனர்.
இந்த கொலை தொடர்பாக காவலாளிகள் பகவன்துடு, போட்டலய்யா உள்பட 3 பேரை புட்டபர்த்தி போலீசார் சைது செய்தனர்.
சந்தேகத்தின் பேரில் சாய் குடியிருப்பு வளாகத்தின் காவலாளியிடம் நேற்று விசாரணை நடத்தினர். இதில் முக்கிய தகவல்கள் கிடைத்ததாக தெரிய வந்துள்ளது.