பெண் பயணியுடன் ‘சில்லறைப் பிரச்சினை’... ஓடும் பேருந்தில் இருந்து ஆற்றில் குதித்த கண்டக்டர் மரணம்?
மங்களூர்: பெண் பயணியுடன் ஏற்பட்ட சில்லறைப் பிரச்சினையைத் தொடர்ந்து கர்நாடகாவில் கண்டக்டர் ஒருவர் ஓடும் பேருந்தில் இருந்து ஆற்றில் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூருவை அடுத்துள்ள குருபூரைச் சேர்ந்த தேவதாஸ் ஷெட்டி (42, மங்களூரு - சுப்ரமண்யா இடையே இயக்கப்படும் கர்நாடக அரசு போக்குவரத்துக் கழக பேருந்தில் நடத்துநராக பணியாற்றி வந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் பணிக்குச் சென்றார் தேவதாஸ். மங்களூருவில் இருந்து சுப்ரமண்யா நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்த போது, அலங்கார் அருகே பெண் பயணி ஒருவர் பேருந்தில் ஏறியுள்ளார்.
அவருக்கு டிக்கெட் வழங்கிய தேவதாஸ், மீதி சில்லறையை பின்னர் தருவதாகக் கூறியுள்ளார். ஆனால், சிறிது நேரத்தில் இது தொடர்பாக அப்பெண்ணிற்கும், தேவதாஸிற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தான் ரூ. 500 கொடுத்ததாக அப்பெண் கூறியுள்ளார். ஆனால், ரூ. 100 தான் கொடுத்தார் என தேவதாஸ் தெரிவித்துள்ளார்.
இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றியதால், பிரச்சினையை தீர்க்க ராமகுஞ்சா போலீஸ் ஸ்டேசனுக்கு சென்றுள்ளனர். அங்கு போலீசார் இருவரையும் சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தனர்.
ஆனாலும் கோபம் குறையாத அப்பெண் தனது சகோதரர்களை அழைத்துள்ளாஅர். அவர்கள் தேவதாஸிடம் இருந்து ரூ. 500ஐ பிடுங்கிக் கொண்டு, அவரைத் தாக்க முயற்சித்துள்ளனர்.
இந்த சம்பவங்களால் மனமுடைந்த தேவதாஸ், குக்கே சுப்ரமண்யா கோயிலை அடுத்துள்ள குமரதாரா ஆற்றுப் பாலத்துக்கு அருகே பேருந்து சென்ற போது, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஆற்றில் குதித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநரும், பயணிகளும் சுப்ரமண்யா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் தேவதாஸைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு தினங்களுக்கு மேலாகியும் தேவதாஸின் உடல் கிடைக்காததால் அவரது குடும்பத்தார் வேதனை அடைந்துள்ளனர்.
இதற்கிடையே தேவதாஸின் சில்லறைப் பையை போலீசார் சோதித்தனர். அதில், 'சில்லறை பிரச்சினையால் எனது மானம் போய் விட்டது. இனி வாழ விரும்பவில்லை'' என தேவதாஸ் எழுதிய கடைசிக் கடிதம் சிக்கியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.