நொய்டாவில் மாயமான பெண் ஃபேஷன் டிசைனர் 4 நாட்கள் கழித்து கண்டுபிடிப்பு
குர்காவ்ன்: நொய்டாவில் திங்கட்கிழமை காணாமல் போன ஃபேஷன் டிசைனர் ஷிப்ரா 4 நாட்கள் கழித்து குர்காவ்னில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
நொய்டாவை சேர்ந்த ஃபேஷன் டிசைனர் ஷிப்ரா மாலிக்(29). அவர் கடந்த திங்கட்கிழமை மதியம் 1 மணி அளவில் தனது வீட்டில் இருந்து மாருதி ஸ்விப்ட் காரில் டெல்லியில் உள்ள சாந்தினி சவுக்கிற்கு கிளம்பினார்.
அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரது கார் மட்டும் வீட்டிற்கு அருகில் நின்று கொண்டிருந்தது. டிரைவரின் இருக்கைக்கு அடியில் காரின் சாவி இருந்தது. இதையடுத்து ஷிப்ராவை காணவில்லை என்று அவரது கணவர் போலீசில் புகார் அளித்தார்.
அவரது போன் சுவிட்ச் ஆப் ஆகும் முன்பு அவர் இரண்டு பேருக்கு போன் செய்து பேசியுள்ளார். அவர் கடைசியாக லஜ்பத் நகரில் இருந்து 100 எண்ணுக்கு போன் செய்துள்ளார். இந்நிலையில் 4 நாட்கள் கழித்து ஷிப்ரா குர்காவ்னில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
குர்காவ்ன் போலீசார் அவரை நொய்டா போலீசாரிடம் ஒப்படைத்தனர். தன்னை மூன்று பேர் குர்காவ்னுக்கு கடத்திச் சென்றதாக அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் போலீசார் கேட்ட கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
கடன் மற்றும் சொத்து பிரச்சனையால் ஷிப்ராவே இந்த கடத்தல் நாடகத்தை நடத்தியதாக கூறப்படுகிறது. உண்மையில் நடந்தது என்னவென்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.