ரூ.500 நோட்டுகளை மாற்றும் போது உஷார்.. அடையாள அட்டைகளை மாற்றிக் காட்டினால் மாட்டிக் கொள்வீர்கள்
ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் வேறு வேறு அடையாள அட்டைகளை காண்பித்து 4000 ரூபாய்க்கு மேல் பணத்தை மாற்றினால் நமக்குத்தான் ஆபத்து என்கிறது மத்திய நிதி அமைச்சகம்.
டெல்லி: ஒருவர் ஒரு நாளைக்கு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து 4000 ரூபாய் வரை வங்கிக் கணக்கு இல்லாத வங்கிகள், அஞ்சலகங்களில் மாற்ற முடியும். இதனை மாற்றி வெவ்வேறு வங்கிகளில் வெவ்வேறு அடையாள அட்டைகளை காண்பித்து பணத்தை மாற்றினால் மாட்டிக் கொள்வார்கள் என்று மத்திய நிதி அமைச்சகம் எச்சரித்துள்ளது.
கடந்த 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதனால் மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து மத்திய அரசு மக்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகள், அஞ்சலகங்களில் கொடுத்து 4000 வரை மாற்றிக் கொள்ளலாம் என்றது. மேலும், அதற்கு மேல் மக்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை கணக்கு வைத்திருக்கும் வங்கிகளில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என்றும் சொன்னது.
மக்கள், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் போது, ஆதார் எண், பான் எண் போன்றவற்றை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அப்படி செய்யும் போது, பலர் ஆதார் எண்ணை சமர்பித்து 4000 ரூபாய் பணத்தை ஒரு வங்கியிலும், மற்றொரு வங்கியில் பான் எண்ணை சமர்பித்து இன்னொரு 4000 ரூபாய் பணத்தை மாற்றியுள்ளனர் என்று புகார் எழுந்துள்ளது.
இப்படி, அடையாள அட்டைகளை மாற்றிக் காண்பித்து கூடுதலாக பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்பவர்கள் பின்னாளில் சிக்கலுக்கு உள்ளாவார்கள் என்றும் பழைய நோட்டுகள் மாற்றும் போது சேகரிக்கப்படும் அனைத்து தகவல்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் போது, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பு ஏற்படும் என்றும் மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்டரல் பேங்க் ஆப் இந்தியா அதிகாரி ஒருவர், ஆதார் எண், பான் கார்ட் பயன்படுத்துவோரை கண்காணிக்கும் சாப்ட்வேரை எங்களது வங்கி மேம்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஒருவர் ஒரு முறைக்கு மேல் அடையாள அட்டையை பயன்படுத்தினால் அதனை இந்த சாப்ட் வேர் அனுமதிக்காது என்று கூறியுள்ளார்.
ஸ்டேட் வங்கியின் அதிகாரி ஒருவர் கூறும் போது, ஒருவர் 4000 ரூபாய் பணத்தை ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட அடையாள அட்டையை பயன்படுத்தி மாற்றிவிட்டார் என்று கண்டுபிடிக்கும் கருவி தங்களிடம் இல்லை என்று கூறியுள்ளார்.
ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமான தொழில் நுட்பத்தை அடையாள அட்டை தொடர்பாக பயன்படுத்தி வருகிறது. சில வங்கிகளில் எந்த தொழில் நுட்ப வசதியும் இல்லாமல் இல்லை. அப்படி இருக்கும் போது பொதுமக்கள் எப்படி வெவ்வேறு அடையாள அட்டையை பயன்படுத்தி பல முறை தவறாக பணத்தை மாற்றியிருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியும் என்று தெரியவில்லை. மேலும், ஏற்கனவே ஒரு வங்கியில் 4000 ரூபாய் பணத்தை மாற்றவே தாவு தீர்ந்துவிடுகிறது. இதில் இரண்டு வங்கியில் 8000 ரூபாய் மாற்றுவது என்பதெல்லாம் எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை. தொடர்ந்து மக்களை குழப்பிக் கொண்டே இருப்பது அல்லது அச்சத்தில் வைத்துக் கொண்டே இருப்பது மத்திய அரசின் வேலையாக பொதுமக்கள் குமுறி வருகின்றனர்.