ராஜ்யசபா எம்.பி பதவியை ராஜினாமா செய்தார் மிதுன் சக்கரவர்த்தி
டெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மிதுன் சக்கரவர்த்தி உடல் நிலை காரணமாக மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தவர் மிதுன் சக்கரவர்த்தி. இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மேல்சபை எம்.பி. ஆக பதவி ஏற்றார். இந்நிலையில் தனது உடல்நிலையை காரணம் காட்டி தனது எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்கு வங்காள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாரதா நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் மிதுன் சக்கரவர்த்தியின் பெயரும் அடிபட்டது. இந்த நிதி நிறுவனத்தின் விளம்பர தூதராக செயல்பட்டதால் அவருக்கும் மோசடியில் பங்கிருப்பதாகக் கூறப்பட்டது. இதனால் அவரிடமும் அமலாக்க பிரிவினர் தீவிர விசாரணை நடத்தியது.
அதன்பிறகு விளம்பர தூதராக செயல்பட்டதற்காக சாரதா நிதி நிறுவனம் தனக்கு வழங்கிய ரூ.1 கோடியே 19 லட்சத்துக்கான வரைவோலையை அமலாக்க பிரிவு அதிகாரிகளிடம் மிதுன் சக்கரவர்த்தி வழங்கினார். இந்நிலையில், தனது பதவியை மிதுன் சக்ரவர்த்தி ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.