சாரதா குழும தலைவர் எனக்கு ரூ.1.76 கோடி அளித்தார்: நடிகர் மிதுன்
கொல்கத்தா: சுதிப்தோ சென் பெரிய அளவில் ஊழல் செய்ய திட்டமிட்டார். ஆளுங்கட்சியின் பெரிய தலைவர்களுடன் தொடர்பில் இருந்தால் ஊழல் செய்யலாம் என்று அவர் நினைத்தார்.
அமலாக்க இயக்குனரகம் விசாரணை நடத்தியதில் சுதிப்தோ சென் பல பிரபலங்களுக்கு பெரிய தொகைகளை அளித்தது தெரிய வந்துள்ளது. அவர் பிரபலங்களுக்கு பணம் அளித்துள்ளபோதிலும் ஒப்பந்தம் எதுவும் அளிக்கவில்லை.
மிதுன் சக்ரபர்த்தி விவகாரமும் இப்படி தான். தான் எப்படி சென்னை சந்தித்தேன், தனக்கு எவ்வளவு பணம் அளிக்கப்பட்டது என்பதை மிதுன் எழுத்துப்பூர்வமாக அமலாக்க இயக்குனரகத்திடம் அளித்துள்ளார்.
நடிகரும், எம்.பி.யுமான மிதுன் என்ன தெரிவித்தார்?
சேனல் 10ல் நிகழ்ச்சி ஒன்றை நடத்த சென் நடிகரும், ராஜ்யசபா எம்.பி.யுமான மிதுன் சக்ரபர்திக்கு ரூ.1.76 கோடி பணம் அளித்துள்ளார். அந்த டிவி நிகழ்ச்சியை நடத்துமாறு தன்னை அறிவுறுத்தி குனால் கோஷ் தான் தன்னை சென்னுக்கு அறிமுகம் செய்து வைத்ததாக சாரதா ஊழல் குறித்து விசாரிக்கும் அமலாக்க இயக்குனரகத்திடம் மிதுன் தெரிவித்துள்ளார்.
அமலாக்க இயக்குனரகம்
அமலாக்க இயக்குனரகத்தின் கண்காணிப்பில் இருந்த மிதுன் தனது பதிலை எழுத்துப்பூர்வமாக அளித்தார். பங்களா போல்சே சோங்கே மிதுன் என்ற நிகழ்ச்சியை நடத்த தனக்கு ரூ.1.76 கோடி அளிக்கப்பட்டதாக மிதுன் அமலாக்க இயக்குனரகத்திடம் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ளார்.
அந்த நிகழ்ச்சி செய்தி தொலைக்காட்சி சேனலான சேனல் 10ல் ஒளிப்பரப்பானதாக மிதுன் தெரிவித்துள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு பணம் பெற்றபோதிலும் அது குறித்து தனக்கும், சென்னுக்கும் இடையே எந்தவித ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை என்று மிதுன் தெரிவித்துள்ளார்.
மிதுன் எப்படி?
சாரதா குழுமத்திற்கு சொந்தமான பெங்கால் மீடியா பிரைவேட் லிமிடெட் மூலம் தான் தனக்கு பணம் அளிக்கப்பட்டது என்று மிதுன் அமலாக்க இயக்குனரகத்திடம் தெரிவித்துள்ளார். பணம் வங்கி மூலம் அளிக்கப்படும் என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
2010ம் ஆண்டு நவம்பர் மாதம் தான் முதன்முதலில் சுதிப்தோ சென்னை சந்தித்ததாக மிதுன் மேலும் தெரிவித்துள்ளார். அவரை சந்திக்குமாறு குனால் கோஷ் தன்னிடம் கூறியதாகவும், அரசியல் விவாத நிகழ்ச்சியை நடத்துமாறும் அவர் கூறினார் என்றும், தானும் அவ்வாறு செய்ததாகவும் மிதுன் தெரிவித்துள்ளார்.
எனக்கு ஊழல் பற்றி எதுவும் தெரியாது. எனக்கு அளிக்கப்பட்ட பணத்திற்கு நான் வரி செலுத்திவிட்டேன் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
விசாரணை
சாரதா குழுமம் பல பிரபலங்களுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது. அந்த பிரபலங்கள் ஒன்று திரிணாமூல் காங்கிரஸுக்கு நெருக்கமானவர்கள் அல்லது கட்சியுடன் தொடர்புடையவர்கள். அனைத்து விவகாரங்களிலும் சென் பெரிய தொகையை அளித்துள்ள போதிலும், அது குறித்து முறையான ஒப்பந்தகங்கள் எதையும் அவர் போடவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.