குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு… பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்.. மிரட்டும் மிசோ முன்னணி
அசால்: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறாவிட்டால், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கான ஆதரவை விலக்கிக் கொள்வோம் என்று மிசோரம் முதல்வரும், மிசோ தேசிய முன்னணி கட்சி தலைவருமான சோரம்தங்கா அதிரடியாக கூறியுள்ளார்.
அண்டை நாடுகளான வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய வற்றில் இருந்து இந்தியாவில் தஞ்சமடைந்த ஹிந்துக்கள், பார்சி இனத்தவர், சீக்கியர்கள், பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில், குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த திருத்த மசோதா, லோக்சபாவில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், மிசோரம் மாநில தலைநகர் அசால் அருகில் உள்ள கிராமம் ஒன்றில் கட்சித் தொண்டர்களிடையே முதல்வர் சோரம்தங்கா பேசியதாவது:
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மிசோரம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.மேலும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை நான் நேரில் சந்தித்து, மசோதாவுக்கான எதிர்ப்புகள் குறித்து விளக்கம் அளித்தேன்.
எனவே, இந்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.இல்லா விட்டால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கி கொள்ளவும் தயங்க மாட்டோம்.
மேலும், மசோதாவுக்கு எதிராக மிசோரம் தேசிய முன்னணி முன்னின்று போராடும்.குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டுவரக் கூடாது.
ஏனெனில், இந்த மசோதா,1986ம் ஆண்டில் இந்திய அரசுக்கும், அப்போதைய மிசோ தேசிய முன்னணி அமைப்புக்கும் இடையே கையெழுத்தான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்துக்கு எதிராக உள்ளது என்று சோரம்தங்கா பேசினார்.
1950களில் அசாமில் மிசோ பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளின் வளர்ச்சியில் மத்திய அரசு அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது. அதை எதிர்த்து போராட மிசோ மக்கள் முன்னணி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அசாமில் இருந்து மிசோரம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது. பிறகு, 1986ல் வன்முறையை கை விடுவதாக அறிவித்த மிசோ மக்கள் முன்னணி, இது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.