வடகிழக்கு மாநில உடையை அணிந்தால் கிண்டல் செய்கிறார்கள்.. மிசோரம் பிரச்சாரத்தில் மோடி பேச்சு!
வடகிழக்கு மாநில மக்களின் கலாச்சாரத்தை காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்கிறது என்று மிசோரத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசியுள்ளார்.
ஐசால்: வடகிழக்கு மாநில மக்களின் கலாச்சாரத்தை காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்கிறது என்று மிசோரத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசியுள்ளார்.
இந்தியா முழுக்க ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்கள் அடுத்தடுத்து நடந்து வருகிறது. இன்னும் தெலுங்கானா, மத்திய பிரதேம், மிசோரம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளது.
இதில் மிசோரம் தேர்தலுக்காக காங்கிரஸ் மற்றும் பாஜக மிகவும் தீவிரமாக அங்கு பிரச்சாரம் செய்து வருகிறது. அங்கு நவம்பர் 28ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.
இந்த தேர்தல் காரணமாக மிசோரத்தில் பிரதமர் மோடி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் மிசோரம் மாநிலம் லாங்லெய் பகுதியில் பிரச்சாரம் செய்தவர் காங்கிரஸ் கட்சி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார்.
நன்மைகள்
அதில், கடந்த நான்கு வருடங்களில் பாஜக அரசு வடகிழக்கு மாநிலத்திற்கு நிறைய நன்மைகளை செய்தும் இருக்கிறது. உங்கள் கலாச்சாரத்தை நாங்கள் பெரிய அளவில் மதித்து இருக்கிறோம். உங்களது கலாச்சாரத்தை பாஜக உலகறியச் செய்துள்ளது.
காங்கிரஸ்
ஆனால் காங்கிரஸ் உங்களுக்கு எதிராக செயல்படுகிறது. உங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறது. காங்கிரஸ் உங்களது கலாச்சாரத்தை கிண்டல் செய்வதை என்னால் ஏற்க முடியவில்லை. நான் வடகிழக்கு மாநில மக்களின் உடையை அணிந்தால் கிண்டல் செய்கிறார்கள்.
கிண்டல்
அது என்னை கிண்டல் செய்வது கிடையாது. உங்களை கிண்டல் செய்வது. உங்களது உடை காங்கிரஸ் கட்சிக்கு கேலிப்பொருளாக உள்ளது. உங்களை காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்யும் போது பெரிய அளவில் எனக்கு கோபம் வருகிறது.
முன்னேற்றியது
வடகிழக்கு மாநிலங்களை முன்னேற்றியது நாங்கள்தான். உங்களுக்கு இன்னும் சாலை வசதி, ரயில் வசதி, விமான வசதி, மருத்துவ வசதி அதிகம் ஏற்படுத்திக் கொடுப்போம். உங்களது முன்னேற்றம்தான் இந்தியாவின் முன்னேற்றம் என்று பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தில் குறிப்பிட்டார்.