வட கிழக்கின் கடைசி மாநிலத்தையும் இழந்த காங்.. 10 ஆண்டு கால மிசோரம் ஆட்சி பறிபோனது!
அய்ஸ்வால்: மிசோரத்தில் 10 ஆண்டுகளாக அரியணையில் இருந்த காங்கிரஸ், ஆட்சியை இழந்துள்ளது. மிசோரம் தேசிய முன்னணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கிறது.
மிசோரம், தெலங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. அதில் மிசோரம் மாநிலத்தில் கடந்த நவம்பர் 28 ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் 80 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில் மிசோ தேசிய முன்னணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
பாஜகவுக்கு ஒரு இடம்
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் மிசோ தேசிய முன்னணிக் கட்சி முன்னிலை வகித்து வந்தது. எம்.என்.எப் கட்சி 26 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும், பாஜக ஒரு இடத்திலும், மற்றவர்கள் 8 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
பெரும்பான்மை பெற்றது
மிசோரம் மாநிலத்தில் ஆட்சி அமைக்க குறைந்தது 21 இடங்களில் வெற்றி பெற வேண்டும். மிசோ தேசிய முன்னணி கூட்டணிக்கு 26 இடங்கள் கிடைத்துள்ளதால் அது ஆட்சியமைக்கிறது.
2 தொகுதியிலும் தோல்வி
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் படுதோல்வியை தழுவியுள்ளது. மிசோரம் முதல்வர் லால் தன்வாலா காங்கிரஸ் மீண்டும் பதவிக்கு வரும் எனக் கூறியிருந்தார். அவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு தொகுதியிலும் தோல்வியுற்றார்.
3வது முறை வந்ததில்லை
மிசோரம் மாநிலத்தில் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே, சில முக்கிய மற்றும் மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, எம்.என்.எப் கட்சி மற்றும் பாஜகவில் இணைந்தனர். அதனால் தான் மிசோரம் மாநிலத்தில் ஆட்சியை இழந்தது காங்கிரஸ் கட்சி என கூறப்படுகிறது.
காங்கிரஸின் பரிதாபம்
மிசோரம் மாநிலத்தை பொருத்தவரை, இதுவரை எந்த கட்சியும் 3வது முறையாக ஆட்சிக்குத் திரும்ப வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வட கிழக்கில் இங்கு மட்டுமே காங்கிரஸ் ஆட்சி இருந்தது. தற்போது அதையும் இழந்து விட்டது.