மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி: ஆட்சியை தக்க வைத்தது
அய்சால்: மிசோரம் மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. நான்கு மாநில தேர்தல்களில் அடிவாங்கிய காங்கிரஸ் கட்சிக்கு இதன் மூலம் ஆறுதல் வெற்றி கிடைத்துள்ளது. .
மிசோரம் மாநில சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் 25-ந்தேதி நடைபெற்றது. இங்குள்ள 40 தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ், மிஜோரம் ஜனநாயக முன்னணி, மிசோ தேசிய முன்னணி என பல்வேறு கட்சிகளை சேர்ந்த 142 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
மிசோரம் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் கட்சிதான் முன்னணியில் இருந்தது.
காங்கிரஸ் 23 தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. மிசோரம் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல் அமைச்சர் வேட்பாளர் லால்தான்ஹாவ்லா தனது சொந்தமாவட்டமான செர்ச் சிப்பிலுள்ள, செர்ச்சிப் மற்றும் ஹராங்டுர்ஹோ ஆகிய இரு தொகுதிகளில் போட்டி வெற்றி பெற்றார். இவர் கடந்த 4 முறையாக முதல்வராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மிசோரமில் ஆட்சி அமைக்க 21 இடங்கள் போதுமான நிலையில் 23 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது,
நான்கு மாநில தேர்தல் முடிவுகள் ஞாயிறன்று வெளியானது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு பலத்த அடி கிடைத்தது. மிசோரமில் வெற்றி பெற்றதன் மூலம் காங்கிரஸ் கட்சி சற்றே ஆறுதல் அடைந்துள்ளது.
மிசோரமில் போட்டியிட்ட மிசோ தேசிய முன்னணி கட்சி 3 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.