மே.வங்க ஆளுநர் எம்.கே. நாராயணனையும் வீட்டுக்கு அனுப்புகிறது மோடி அரசு!
டெல்லி: மேற்கு வங்க மாநில ஆளுநர் எம்.கே. நாராயணனையும் ராஜினாமா செய்ய வலியுறுத்தி வருகிறது மத்திய அரசு. இதனால் அவரும் விரைவில் தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுக்கலாம் எனத் தெரிகிறது.
கேரளாவைச் சேர்ந்தவர் எம்.கே. நாராயணன். சென்னை லயோலா கல்லூரியில் படித்து முடித்தவர்.. இலங்கை பிரச்சனையில் இந்தியா தீவிரமாக ஒருதலைபட்சமாக தலையிட்ட ராஜிவ் காந்தி காலத்தில் உளவு அமைப்பான ஐ.பி. தலைவராக இருந்தவர்.
ஐ.பி தலைவர்.. ராஜிவ் கொலை
இவர் ஐ.பி. தலைவராக இருந்த காலத்தில்தான் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். ஆனால் இவர் பதவி நீக்கம் செய்யப்படவில்லை. அதேபோல் ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை சிபிஐ விசாரணைக்கு தராமலேயே மறைத்தவர் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்டவரும் இவரே.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
2004ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்த போது உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசகரானார். பின்னர் தேசிய பாதுகாப்பு ஆலோசகரானார்.
மும்பை தாக்குதல்
இவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவி வகித்த காலத்தில்தான் அதாவது 2008ஆம் ஆண்டு மும்பை தாக்குதல் சம்பவமும் நடந்தது.
இலங்கையின் நண்பராக இந்தியா
அதேபோல் இலங்கை இறுதியுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அரசை செயல்படவைத்தவரும் எம்.கே. நாராயணன் என்று கூறப்படுவது உண்டு.
மே.வங்க ஆளுநராக..
அதன் பின்னர் 2010ஆம் ஆண்டு ஜனவரி 24-ந் தேதி மேற்கு வங்க ஆளுநராகவும் அப்போதைய காங்கிரஸ் மத்திய அரசால் நியமிக்கப்பட்டார். பொதுவாக காங்கிரஸ் நல விரும்பியாக, கேரளா லாபியிஸ்டாகவும் காலத்தை ஓட்டியவர் எம்.கே. நாராயணன்.
ராஜினாமா செய்கிறார்?
இப்போது எம்.கே. நாராயணனையும் மோடி அரசு பதவி விலக சொல்லியிருக்கிறது. இதனால் நிச்சயம் எம்.கே. நாராயணன் எந்த நேரத்திலும் ராஜினாமா செய்யக் கூடும் என்றே தெரிகிறது.