ஜெயலலிதா போன்று ஸ்டாலினுக்கும் 'இசட் பிளஸ்' பாதுகாப்பு
டெல்லி: திமுக தலைவர் கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதியதை அடுத்து மு.க. ஸ்டாலினுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படவிருக்கிறது.
திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தனது சகோதரரும், திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலின் இன்னும் 3 மாதங்களில் இறந்துவிடுவார் என்று கட்சி தலைவரும், தனது தந்தையுமான கருணாநிதியிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஏற்கனவே இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள ஸ்டாலினுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கக் கோரி கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினார்.
இசட் பிளஸ்
அவர் கடிதம் எழுதியதையடுத்து ஸ்டாலினுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.
பாதுகாப்பு
ஸ்டாலினுக்கு 36 பாதுகாவலர்கள், குண்டுகள் துளைக்காத வாகனம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை அல்லது கருப்பு பூனை படை கமான்டோக்கள் பாதுகாப்பு அளிக்கக்கூடும் என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஸ்டாலினுக்கும்
பஞ்சாப் டிஜிபி கே.பி.எஸ். கில் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோருக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி வருகிறது. காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி வைப்பதில் ஆர்வமாக இருப்பதால் ஸ்டாலினுக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
ஜெயலலிதா
திமுக தலைவர் கருணாநிதி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கு தற்போது இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.