கொல்கத்தா உரையில் ஸ்டாலின் ஒரு முக்கிய விஷயத்தை சொல்லவில்லை, கவனிச்சீங்களா!
Recommended Video
கொல்கத்தா: கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், முதல்வருமான மமதா பானர்ஜி தலைமையில் இன்று நடைபெற்ற எதிர்கட்சிகளின் பிரமாண்ட பேரணியில் பங்கேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
கடந்த டிசம்பர் மாதம் சென்னை அண்ணா அறிவாலயத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின் நிகழ்த்திய உரை தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் மீண்டும் முக்கிய கட்சி தலைவர்கள் இணைந்துள்ள இந்தக் கூட்டத்தில் ஸ்டாலின் எந்த மாதிரி பேசப் போகிறார் என்று எதிர்பார்ப்பு இயல்பாகவே எழுந்திருந்தது.
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் எவ்வாறு மோடியையும், மத்திய பாஜக அரசையும் தாக்கிப்பேசினாரோ அதேபோன்றுதான் இன்றும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் ஸ்டாலின்.
விமர்சனம்
கருப்பு பணத்தை மீட்பேன் என்று பொய்யான வாக்குறுதியை கொடுத்து ஆட்சியைப் பிடித்தவர் மோடி என்றும், அவர் உள்நாட்டில் தான் இருக்கிறாரா, வெளிநாட்டில் இருக்கிறாரா என்பதே தெரியாது என்றும், ரஃபேல் உள்ளிட்ட பல்வேறு ஊழல்கள் மோடி அரசில் நடந்துள்ளன என்றும் வரிசையாக அடுக்கடுக்காக விமர்சனக் கணைகளை தொடுத்தார் ஸ்டாலின்.
ராகுல் காந்தி
அதே நேரம், சென்னை நிகழ்ச்சியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று முன்மொழிந்த ஸ்டாலின், கொல்கத்தா கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் குறித்து வாய் திறக்கவில்லை. மம்தா பானர்ஜியை இரும்புப் பெண்மணி என்று வர்ணித்த ஸ்டாலின், அமித்ஷாவும், மோடியும் மேற்கு வங்க மாநிலத்திற்கு வருவதற்கே பயப்படும் நிலையை மமதா பானர்ஜி உருவாக்கி வைத்துள்ளதாக புகழாரம் சூட்டினார். இவ்வளவு புகழுரைகளுக்கு நடுவேயும் தேசிய அரசியலில் மமதா பானர்ஜியின் பங்களிப்பு குறித்து ஸ்டாலின் எதையும் குறிப்பிடவில்லை.
மமதா பானர்ஜி பிரதமர் வேட்பாளர்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை பொறுத்த அளவில், மமதா பானர்ஜி எதிர்க்கட்சிகளின் பிரதம வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதில், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட முக்கியமான பிராந்திய கட்சிகளின் தலைவர்கள் யாருக்கும் விருப்பமில்லை. இருப்பினும் ஸ்டாலின் இதுவரை அதை மாற்றி பேசவில்லை.
விமர்சனங்கள்
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து விட்டு மமதா பானர்ஜி ஏற்பாடு செய்துள்ள கூட்டத்திற்கு ஸ்டாலின் செல்கிறாரே, என்று அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்தனர். இதற்கும் ஸ்டாலின் தனது உரையில் பதிலடி கொடுத்தார். திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மீது, மமதா பானர்ஜி மிகுந்த மரியாதை வைத்திருந்தார் என்றும், கருணாநிதி மறைந்த தினத்தன்று இரவே சென்னைக்கு வந்து உரிய அஞ்சலியை செலுத்தி விட்டுச் சென்றார் என்றும், எனவே மமதா பானர்ஜி எப்போது அழைத்தாலும் வருவேன் என்றும் தெரிவித்தார் ஸ்டாலின்.
தேர்தலுக்கு பிறகு
இந்த நிலையில்தான் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மமதா பானர்ஜி தலைமையிலான கூட்டணியை விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் வேட்பாளர் யார் என்று கேட்டால் இந்த கூட்டணி கலைந்துவிடும் என்று தமிழிசை தெரிவித்துள்ளார். அதனால்தான் ஸ்டாலினும் மிகவும் லாவகமாக பிரதமர் வேட்பாளர் குறித்து இந்த உரையில் ஒரு வார்த்தை கூட தெரிவிக்கவில்லை. தேர்தலுக்கு பிறகு பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்பது எதிர்க்கட்சி கூட்டணி திட்டமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை உணர்ந்துதான் ஸ்டாலினும் அது குறித்து வாய் திறக்கவில்லை என்று திமுக வட்டாரங்கள் தெரிவிகின்றன.