மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் நியமனம் ரத்து உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
மதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தர் செல்லதுரை நியமன ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
Recommended Video
டெல்லி: மதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தர் செல்லதுரை நியமன ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 2 ஆண்டுகளாக துணைவேந்தர் இல்லாமல் இயங்கி வந்தது. இதனையடுத்து கடந்த ஆண்டு மே 27 ஆம் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக செல்லதுரை நியமிக்கப்பட்டார்.
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஒருவர் நியமிக்கப்படுவதற்கு அவர் 10 ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்திருக்க வேண்டும்.
ஆனால், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு அந்தப் பல்கலைக்கழகத்தில் கல்லூரி வளர்ச்சிக் கவுன்சிலின் டீனாகப் பணியாற்றிய பி.பி.செல்லதுரை புதிய துணைவேந்தராக கடந்த ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்டார்.
இதனை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தர் செல்லத்துரையின் நியமனத்தை ரத்து செய்து கடந்த 14ஆம் தேதி உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய கோரி செல்லதுரை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்தின் துணை வேந்தர் நியமன ரத்து உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என கூறியுள்ளது.
மேலும் இதுதொடர்பாக தமிழக அரசு 3 வாரத்தில் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்ட செல்லதுரை மீது கொலை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.