யாசகம் கேட்கும் பெண்ணுக்கு இறுதி சடங்கு செய்த எம்எல்ஏ!
ஆதரவற்ற பெண்ணின் இறுதிச் சடங்கை ஒடிஸா எம்எல்ஏவும் அவரது மகனும் உறவினரும் செய்தனர்.
புவனேஸ்வர்: ஒடிஸாவில் ஆதரவற்ற பெண்ணின் இறுதிச் சடங்கை ஒடிஸா எம்எல்ஏ ரமேஷ் பத்துவாவும் அவரது மகனும், உறவினரும் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிஸா மாநிலம் ரெங்காலி தொகுதியில் யாசகம் கேட்டு பிழைத்த பெண் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் அங்கு இருப்பவர்கள் கொடுக்கும் மிச்சம் மீதி உணவுகளை உண்டு வந்தார். அவரது ஜாதி அங்குள்ள கிராமத்தினருக்கு தெரியாது..
இந்நிலையில் அவர் திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். அவர் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்று யாருக்கும் தெரியாததால் அவருக்கு இறுதி சடங்குகளை செய்ய யாரும் முன்வரவில்லை.
அந்த கிராமத்தை பொருத்தமட்டில் ஒருவரது ஜாதி என்னவென்று தெரியாவிட்டால் அவரது உடலை யாரும் தொடமாட்டார்கள். மீறி தொட்டால் அந்த நபரை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது கிராமத்தின் வழக்கம். இதனால் அந்த பெண்ணின் சடலத்தை தொட்டு தூக்க யாருக்கும் மனமில்லை.
இது அத்தொகுதி எம்எல்ஏ ரமேஷ் பத்துவாவின் காதுகளுக்கு சென்றது. இவர் தனது மகன் மற்றும் உறவினருடன் சம்பவ இடத்துக்கு வந்தார். 4 மூங்கில் கொம்புகளை வாங்கி அந்த பெண்ணை தூக்கி சென்று இறுதி சடங்குகளை மேற்கொண்டார்.
இறந்த அந்த பெண்ணின் உறவினரும் தற்போது உடல்நிலை சரியில்லாமல் உள்ளார். அதனால் அவராலும் இறுதி சடங்குகளை செய்ய இயலாத நிலை இருந்தது. இந்நிலையில் எம்எல்ஏ இறுதி சடங்குகளை செய்தாலும் அவர் எந்த சர்ச்சையிலும் சிக்கவில்லை.
ஒடிஸாவில் இருக்கும் எம்எல்ஏக்களில் ரமேஷ் பத்துவாதான் ஏழை. அவருக்கென ஒரு சொந்த நிலமும் இல்லை. அவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.