தமிழக சட்டசபை நிகழ்வுகள் எதிர்பாராதவை… கபில்சிபல் கவலை
தமிழக சட்டசபையில் நடைபெற்ற நிகழ்வுகள் எதிர்பாராதவை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில்சிபல் கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லி: எடப்பாடி பழனிச்சாமி தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை கோரினார். அப்போது ரகசிய வாக்கெடுப்பை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
கடந்த 16ம் தேதி சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, அவர் எடப்பாடி பழனிச்சாமியின் பலத்தை நிரூபிக்க இன்று சிறப்பு சட்டசபைக் கூட்டப்பட்டது. இன்று காலை கூடிய சட்டசபையில் திமுக, காங்கிரஸ், ஓபிஎஸ் அணியினர் ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்தார். இதனையடுத்து, திமுக எம்எல்ஏக்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். பின்னர், அவையில் மைக் மற்றும் நாற்காலிகள் உடைப்பு சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டன. இதனையடுத்து, சபாநாயகர் அவையை ஒத்தி வைத்தார்.
சட்டசபையில் நடைபெற்ற இந்த நிகழ்வு குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில்சிபல், எதிர்பாராத நிகழ்வு என்ற கருத்து தெரிவித்துள்ளார். மேலும், சட்டசபையில் சபாநாயகர் தனபால் எடுக்கும் முடிவை அனைத்து எம்எல்ஏக்களும் ஏற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.