ராஜஸ்தான் அரசியல் நெருக்கடி.. ஜெய்சால்மருக்கு கொண்டு செல்லப்படும் அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை ஆதரிக்கும் எம்.எல்.ஏக்கள் இன்று ஜெய்சால்மருக்குப் புறப்படலாம் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் தலைமையிலான 19 பேர் அரசுக்கு எதிராக திரும்பி இருக்கிறார்கள். இதனால் ஆட்சி கவிழும் அபாயத்தில் முதல்வர் அசோக் கெலாட் இருக்கிறார்.
இந்நிலையில் நீண்ட இழுபறிக்கு பின்னர் ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, முதல்வர் அசோக் கெலாட்டிடம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி சட்டசபையை கூட்ட ஒப்புதல் அளித்துள்ளார். அப்போது பெரும்பான்மை நிரூபிக்க அசோக் கெலாட் விரும்புகிறார். அதுவரை தன்னை ஆதரிக்கும் எம்எல்ஏக்களை நம்பிக்கை வாக்கெடுப்பு வரை பாதுகாப்பாக வைத்திருக்க விரும்புகிறார்.
இந்நிலையில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை ஆதரிக்கும் எம்.எல்.ஏக்கள் இன்று ஜெய்சால்மருக்குப் புறப்படலாம் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது. அனைத்து எம்.எல்.ஏ.க்களும் முன்கூட்டியே தயாராக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஒருபக்கம் லாக்டவுன்.. இன்னொருபக்கம் சரியும் கொரோனா கிராப்.. சரியான பாதையில் தமிழகம்.. குட்நியூஸ்!
ராஜஸ்தானில் எம்எல்ஏக்கள் ஜெய்சால்மரில் மேரியட் ஹோட்டல் அல்லது சூரியாகர் ரிசார்ட்டுக்கு மாற்றப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. அமைச்சர்கள் இதற்கான பணியை ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு முதல் மூன்று விமானங்கள் எம்.எல்.ஏ.க்களை ஜெய்சால்மருக்கு கொண்டு செல்லக்கூடும் என்றும் அவர்கள் பேருந்துகளில் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஜெய்சால்மர் காவல்துறையினர் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.