வாரணாசியை மோடிக்கு விட்டுக் கொடுக்க முடியாது.. அடம்பிடிக்கும் முரளி மனோகர் ஜோஷி!
வாரணாசி: லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்காக வாரணாசி தொகுதியை விட்டுக் கொடுக்க முடியாது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி மறுத்துள்ளார்.
குஜராத் முதல்வரும் பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான மோடியை தேசியத் தலைவராக காட்டும் முயற்சியில் அவரை உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட வைக்க திட்டமிடப்பட்டது.
இதற்கு ஏதுவாகவே மோடியின் நெருங்கிய சகாவான அமித் ஷா, உத்தரப்பிரதேச மாநில பாஜக பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். அத்துடன் வாரணாசி தொகுதி எம்.பியாக இருக்கும் முரளி மனோகர் ஜோஷியை வேறு ஒரு தொகுதியில் நிறுத்தவோ அல்லது ராஜ்யசபா எம்.பியாக்கவோ பாஜக திட்டமிட்டிருந்தது.
மேலும் வாரணாசியுடன் குஜராத்தில் காந்திநகர் அல்லது அகமதாபாத் தொகுதியில் போட்டியிடவும் மோடி முடிவு செய்திருந்தார். காந்திநகர் தொகுதி எம்.பி.யாக இருப்பவர் அத்வானி. அகமதாபாத் எம்.பி.யாக இருப்பவர் ஹரின் பதக்.
இப்படி இரண்டு முக்கிய தலைவர்களின் தொகுதிகளை குறி வைப்பதை சில பாஜக தலைவர்கள் வெறுப்புடனே பார்த்தும் வருகின்றனர். இதன் விளைவாக திடீரென வாரணாசி தொகுதியை விட்டுக் கொடுக்க முடியாது என்று முரளி மனோகர்ஜோஷி அடம்பிடிக்க தொடங்கியுள்ளார். ஆனால் இது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கவும் அவர் மறுத்துவிட்டார். தமது முடிவை அத்வானியிடம் நேரில் தெரிவித்திருக்கிறாராம் ஜோஷி.
ஜோஷியின் பிடிவாதத்தால் பாஜகவில் மீண்டும் கலகக் குரல் உருவாகும் வாய்ப்பு இருக்கிறது என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.