குழந்தை கண் முன்னாலேயே தந்தைக்கு சரமாரி அடி உதை.. வாட்ஸ் ஆப் வதந்தியால் மங்களூரில் விபரீதம்
குழந்தை கடத்துபவர் என நினைத்து பெற்ற தகப்பனை அடித்த பொதுமக்கள்
Recommended Video
மங்களூர்: ஒருவரை குழந்தை கடத்துபவர் என சந்தேகிப்பதுடன், அவரை என்ன ஏதென்று கூட விசாரிக்காமல் பலபேர் சேர்ந்து கொண்டு வரிந்து கட்டிக் கொண்டு அடிக்க வரும் பழக்கம் எல்லா இடங்களிலும் இருக்கும் போல.
கர்நாடக மாநிலம் மங்களூரில் உச்சிரே என்னுமிடத்தில் வசித்து வருபவர் கலீத். இவருக்கு வயது 30. திருமணமாகி 2 வயது குழந்தை உள்ளது. இவர் தனது குழந்தையுடன் ஆட்டோவில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் சாலையின் ஓரத்தில் விற்கப்பட்ட ஒரு பொருளை கேட்டு குழந்தை அடம்பிடித்தது. இதனால் கலீத் குழந்தையை அதட்டினார். ஆனாலும் ஓயாமல் குழந்தை தொல்லை பண்ணவும், கலீத், கோபத்தில் குழந்தையை லேசாக அடித்துவிட்டார்.
பதிலளிக்காத கலீத்
இதனால் குழந்தை இன்னும் சத்தமாக அழத் தொடங்கியது. குழந்தையை திட்டியதையும், அடித்ததையும் ஆட்டோ கூடவே பைக்கில் 2 பேர் பார்த்து கொண்டே வந்தனர். இதனால் ஆட்டோவை வழிமறித்து நிறுத்தியதுடன், கலீத்தையும் கீழே இறங்க சொல்லினர். ஒன்றும் புரியாமல் கலீத் முழித்துக் கொண்டே ஆட்டோவிலிருந்து இறங்கினார். பின்னர் குழந்தை குறித்து கலீத்திடம் விசாரித்தனர். அதற்கு கலீத் எதுவுமே பதிலளிக்காமல் நின்றார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கலீத்தை தாக்க தொடங்கிவிட்டனர்.
சரமாரி தாக்குதல்
இதனால் அதிர்ச்சியடைந்த கலீத், "ஏன் என்னை அடிக்கிறீர்கள்" என கேட்டார். அதற்கு அந்த இருவரும் "நீ இந்த குழந்தையை கடத்திட்டு போக பாக்கிறீயா? குழந்தையை எங்க கடத்தி கூட்டிட்டு போறேன்னு" சொல்லி மீண்டும் அடிக்கத் தொடங்கினார். அதுவரை சுற்றிலும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பொதுமக்கள், அவர்கள் சொன்னதை கேட்டதும், உடனே ஒன்றுசேர்ந்து விட்டார்கள். இப்போது அனைவரும் சேர்ந்து சரமாரியாக அடிக்க தொடங்கினர்.
திருதிரு என விழித்த மக்கள்
உடனே கலீத், "அடிக்காதீங்க, இது என் குழந்தைதான்". என்றார். அந்த கும்பலில் யாருமே அதை காதில் வாங்கவில்லை. கலீத்தை அடித்து துவைப்பதிலேயே குறியாக இருந்தனர். இந்த தகவல் அதற்குள் போலீசாரின் காதுகளுக்கு எட்டியதையடுத்து,சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தாக்கி கொண்டிருந்த கும்பலிடமிருந்து கலீத்தை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அப்போது தன் தந்தையை பார்த்தும், குழந்தை "அப்பா..." என கத்தி கூப்பிட்டது. இதை கேட்டதும் எல்லோரும் திருதிருவென முழித்து நின்றனர்.
வதந்திகளை நம்ப வேண்டாம்
போலீசாரோ, "யார் இவரை முதலில் அடிக்க ஆரம்பிச்சது, எதுக்கு மேல கை வைக்கிறீங்க? உங்களுக்கு யார் மேல சந்தேகம் இருந்தாலும், எங்க கிட்டவந்து சொல்ல வேண்டியதுதானே? வாட்ஸ்அப் வதந்தியை நம்ப வேண்டாம்னு சொன்னா கேட்க மாட்டீங்களா? இனியும் இப்படி, குழந்தை கடத்துபவர்-ன்னு ஒரு முடிவுக்கு வந்து நீங்களே யாரையாச்சும் அடிச்சா, கடுமையான நடவடிக்கை எடுப்போம்" என்று மக்களை எச்சரித்து சென்றார்.