கிலானிக்கு உடம்பு சரியில்லை.. பரவும் வதந்திகள்.. காஷ்மீரில் மீண்டும் இன்டர்நெட் கட்!
ஸ்ரீநகர்: பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானியின் உடல் நிலையை வைத்து வதந்திகள் பரவுவதால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் மீண்டும் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கை காக்க இந்த நடவடிக்கை என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
மொபைல் இன்டர்நெட்டை அரசு துண்டித்துள்ளது. கிலானிக்கு 90 வயதாகிறது. அவர் உடல் நலமின்றி இருக்கிறார். இந்த நிலையில் அவரது உடல் நலம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு செய்திகள் பரவின. இதனால் பரபரப்பும் பதட்டமும் அதிகரித்தது.
இதையடுத்து மொபைல் இன்டர்நெட்டை துண்டித்துள்ளது அரசு. மேலும் காஷ்மீரின் முக்கியப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர். எந்த மோதலும் ஏற்பட்டு விடாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே, கிலானி சில காலமாகவே உடல் நலக்குறைவுடன் இருப்பதாகவும், ஆனால் அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் விளக்கியுள்ளனர்.
ஸ்ரீநகரில் 25 வெளிநாடுகளின் தூதர்கள் குழு- காஷ்மீர் நிலவரம் குறித்து ஆய்வு
வெளிநாட்டுத் தூதர்கள் வருகை
இதற்கிடையே, 25 நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் இன்று ஜம்முவுக்கு வருகை தருகின்றனர். இவர்களில் பலர் ஐரோப்பிய யூனியன் மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் கிரிஷ் சந்திரா முர்முவையும், உயர் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசுவார்கள். இந்தக் குழுவில் ஜெர்மனி, கனடா, பிரான்ஸ், நியூசிலாந்து, மெக்ஸிகோ, இத்தாலி, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரியா, உஸ்பெக்கிஸ்தான், போலந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் இடம் பெற்றுள்ளனர்.