ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவும் வகையில் செல்போனில் அவசர உதவி பட்டன்: மேனகா காந்தி தகவல்
டெல்லி: ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவும் வகையில் செல்போன்களில் அவசர உதவி பட்டன் பொருத்தப்பட உள்ளதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளார்.
இந்த புதிய வசதியின் மூலம் ஆபத்தில் இருக்கும் பெண்கள் செல்போனில் ஆபத்துகால அழைப்பு பட்டனை அழுத்தினால் போதும் போலீசார் உடனடியாக விரைந்து வந்து உதவும் வசதி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அமலுக்கு வர உள்ளதாக மேனகா தெரிவித்தார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், அவசர காலங்களில் பெண்கள், இந்த பட்டனை அழுத்துவதன் மூலம், காவல்துறைக்கு தகவல் போய்ச் சேரும். பெண் ஒருவர் ஆபத்தில் மாட்டிக் கொண்டால் அவர் செய்ய வேண்டியது எல்லாம், செல்போனில் இருக்கும் அந்த பட்டனை அழுத்தினால் போதும். உடனே அதுதொடர்பான செய்தி போலீசாரை சென்று அடையும்.
இந்த வசதியை ஏற்படுத்த நாடு முழுவதும் 10,000 மையங்களை ஏற்படுத்த செல்போன் நிறுவனங்களை கேட்டுக் கொண்டு உள்ளோம். செல்போன் பயன்பாட்டாளர்கள் தங்களது செல்போனில் இந்த சிறப்பு வசதியை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் அவர் கூறுகையில், இதற்கான ஒப்புதலை பெற ஓராண்டு ஆகியுள்ளது. பல கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்த பட்டனை பொருத்த மொபைல் நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. புதிதாக தாயாரிக்கப்படும் மொபைல் போன்களில் மட்டுமல்லாது, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மொபைல் போன்களிலும் இந்த வசதி இருக்க வேண்டும் என தாம் வலியுறுத்தியுள்ளதாகவும் மேனகா கூறியுள்ளார்.