‘தெகல்கா’ ஆசிரியர் தேஜ்பால் சிறை அறையில் செல்போன் கண்டுபிடிப்பு
‘தெகல்கா' பத்திரிகை ஆசிரியரான தருண் தேஜ்பால் தனது பத்திரிகையில் பணியாற்றும் பெண் பத்திரிகையாளர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் கோவா வாஸ்கோ சிட்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று துணை கோட்ட மாஜிஸ்திரேட் குரிஷ் ஷாங்க்வால்கர் சிறை அறைகளில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது தருண் தேஜ்பால் அறையில் இருந்த செல்போனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தேஜ்பால் அடைக்கப்பட்டுள்ள 14வது நம்பர் சிறை அறையில் அவருடன் மேலும் நான்கு பேர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். கைப்பற்றப் பட்ட செல்போன் தன்னுடையது இல்லை என தேஜ்பால் மறுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய சோதனையில் மொத்தம் 9 செல்போன்கள் சிறையில் இருந்து கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. மேலும், செல்போனில் ரகசியமாக பேசுவதற்கு வசதியாக ஹெட்போன்கள், புகையிலைப் பொருட்கள் மற்றும் எம்பி.3 போன்றவையும் சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.