ஆதார் சர்வருடன் ஸ்மார்ட் போன்களை இணைக்க திட்டம்.. அரசு சேவையை பெற கை ரேகை போதும்!
டெல்லி: உலகிலேயே முதல் முறையாக கை ரேகை, கண் விழித்திரை அடையாளத்தை வைத்து அனைத்து வகை அரசு சேவைகளையும் பெறும் வசதி இந்தியாவில் விரைவில் வர உள்ளது. இதற்கு ஸ்மார்ட்போன்கள் பக்க பலமாக நிற்க உள்ளன.
ஆதார் அடையாள அட்டை ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி பூஷன் பாண்டே, நேற்று டெல்லியில் நடத்திய முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்றில், இந்த திட்டத்திற்கு, பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், ஆப்பிள், சாம்சங், கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் மைக்ரோமேக்ஸ் நிறுவன உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
பரிசீலனை
இக்கூட்டத்தில் ஸ்மார்ட் போன்கள் எப்படி ஆதார் ஆணையத்தோடு இணைந்து செயல்படுவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான ஸ்மார்ட்போன் நிறுவன அதிகாரிகள், பாண்டே கோரிக்கையை பரிசீலிப்பதாக கூறியுள்ளனர்.
கை ரேகை
தற்போது உயர ரக போன்களில் மட்டுமல்லாது, நடுத்தர ஸ்மார்ட் போன்களிலும் கூட, கை ரேகை மற்றும் கண் கருவிழி படலத்தை கொண்டு போன்களை ஓப்பன் செய்யும் தொழில்நுட்பம் அறிமுகமாகியுள்ளது.
தகவல்கள்
இவ்விரு தகவல்களும் ஆதார் அடையாள அட்டை அமைப்பிடம் ஏற்கனவே உள்ளவைதான். அதாவது ஆதார் அட்டை எடுக்கும்போது கண் கருவிழி படலம், கைரேகை போன்றவற்றை அனைத்து மக்களும் கொடுத்துள்ளார்கள்.
அரசு சேவை
எனவே ஸ்மார்ட் போன்களில் ஆதார் சர்வரை இணைத்து, அரசின் பல்வேறு சேவைகளை கைரேகை மற்றும் கண் விழித்திரையை கொண்டு உடனுக்குடன் பெற வசதி செய்யப்படுவதுதான் இந்த ஆலோசனை கூட்டத்தின் நோக்கம்.
புதிய போன்கள்
அரசு சேவைகளை உரிய நபர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதை உறுதி செய்ய இந்த நடைமுறை வழிவகைசெய்யும். கை ரேகையை பதிவு செய்ததும், அரசு சேவைகள் விரைவில் வீட்டு வாசலுக்கு வர இந்த திட்டம் வகை செய்யும். ஸ்மார்ட் போன்களில் ஜிபிஎஸ் உள்ளதை போல ஆதார் திட்டமும் இணைக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த வசதி கொண்ட போன்களை உற்பத்தி செய்ய ஆதார் வாரியம் ஸ்மார்ட் போன் நிறுவனங்களுக்கு அழைப்புவிடுத்துள்ளது.
ஆப்பிள் சந்தேகம்
ஆப்பிள் பொதுவாக தனது வாடிக்கையாளரின் விவரங்களை அரசுக்கு தருவதில்லை. அமெரிக்காவின் எப்.பி.ஐ பாதுகாப்பு அமைப்புக்கும் ஆப்பிளுக்கும் ஏற்கனவே இதுதொடர்பாக பஞ்சாயத்து உள்ளது. எனவே அது ஆதார் திட்டத்திற்கு ஒத்துழைக்குமா என்பது தெரியவில்லை.
சாம்சங் ரெடி
ஆலோசனையில் பங்கேற்ற பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் தலைமையகத்திடம் பேசி உரிய முடிவை அறிவிப்பதாக கூறியுள்ளனவாம். சாம்சங் நிறுவன அதிகாரி ஒருவர் மட்டும் பத்திரிகையாளர்களிடம் வெளிப்படையாக பேசியுள்ளார். ஏற்கனவே, தங்கள் போன்களில் சில, ஆதார் திட்டத்திற்கு உதவும் வகையில் வெளியாகிவருவதாக அவர் கூறியுள்ளார்.
முதல் நாடு
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், உலகிலேயே அரசு சேவையை ஸ்மார்ட் போன் கை ரேகையை கொண்டு பெறும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறும். இந்தியாவில் 100 கோடிக்கு அதிகமானோர் ஆதார் அடையாள அட்டையை பெற்றுள்ளனர். 40 கோடி பேரிடம் ஸ்மார்ட் போன்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.